Monday, May 30, 2011

டிக்கிலோனா - 5



மே - 17 நெல்லை பதிவர் சந்திப்பில் என்ன நடக்கும்?


           
                                           
ரயில்வே ஜங்சனில் முக்காடு போட்டுக்கொண்டு மெதுவாக குறுகுறுவென பார்க்கிறார் மனோ. "நல்லவேளை, கடன் கொடுத்தவன் எவனும் கண்ணுல தட்டுப்படல. அப்படியே ஹோட்டல் ஜானகிராம் உள்ள பதுங்கிடுவோம்" என எண்ணிய அடுத்தநொடி...ஒரு அருவா அவர் முதுகை சொறிகிறது. "எலேய் மக்கா சத்த நில்லு" என ஒரு குரல் பீதியை கிளப்ப..வேர்த்து விறுவிறுக்க  திரும்பி பார்க்கிறார். "இம்சை அரசா..நீயா..ஏன் இப்படி வவுத்த கலக்குற. என்ன அப்படியே பொத்துனாப்புல ஹோட்டலுக்குள்ள கொண்டு போயிரு" என்று பாபு காலின் சுண்டு விரலை இழுத்து பிடித்து கேட்கிறார். ஹோட்டல் வாசலில் இருவருக்கும் அனுமதி மறுக்கும் காவலாளி "சாரி சார் பொக்கே கொண்டு வந்து வாழ்த்து சொல்றவங்களை மட்டும் அனுமதிக்க சொல்லி இருக்கார் சங்கரலிங்கம் சார்". அந்த நேரம் பார்த்து கவிதை வீதி சௌந்தர் சுட்டெரிக்கும் சூரியனை வைத்த கண் வாங்காமல் பார்த்து கவிதை எழுத, அப்படியே அவர் கையில் இருக்கும் பொக்கேவை லவட்டிக்கொண்டு உள்ளே செல்கின்றனர் இருவரும்.  

"அப்படியே ஓரமா நிறுத்துப்பா லாரிய" என்று கத்தும் சத்தத்தை கேட்டு வெளியே வருகிறார் 'உணவு' சங்கர். "ஹல்லோ சி.பி. எப்படி இருக்கீங்க" என கேட்க "கில்மாவா இருக்கேன் சார்" என்றவாறு அருகில் இருக்கும்  மளிகைக்கடை அண்ணாச்சியிடம் கைகொடுக்கிறார் சி.பி. "அய்யா தயவு செஞ்சி கூலிங் கிளாசை கழட்டுங்க. நான் இங்க இருக்கேன்" என வீறிடும்  சங்கர் "எதுக்குங்க லாரி?" என்கிறார். அதற்கு சி.பி. "மொத்தமும் நாட்டு தக்காளி சார். தக்காளி அந்த நாஞ்சில் மேல எறியத்தான்". சங்கர் "அது உங்க இஷ்டம். ஆனா இந்த தக்காளி எல்லாம் தரமானதுதானா? ஏம்பா, ஒரு தக்காளி விடாம செக் பண்ணுங்க. கலப்பட தக்காளி இருந்தா எல்லாத்தையும் ஆத்துல கொட்டுங்க" என ஆர்டர் போடுகிறார். கடுப்புடன் உள்ளே சி.பி. நுழைகிறார். 

"ஒசரமா இருக்குறவங்க தயவு செஞ்சி பின்னால உக்காருங்க. இல்லன்னா இந்த கழுகை விட்டு உங்க மூக்கை கொத்த விட்டுடுவேன்" என வேடந்தாங்கலில் இருந்து கொண்டு வந்த பெரிய சைஸ் பறவையை காட்டி அனைவரையும் பயமுறுத்துகிறார் கருன். ரோல்ஸ் ராய்ஸ் காரில் இருந்து மின்னலென இறங்கி மேடைக்கு வருகிறார் சித்ரா. "ஹாய் மக்காஸ். ஹாப்பி வீக்கென்ட் டு எவெரிபடி" என கை அசைக்கிறார். "மேடம், இன்னிக்கி வெள்ளிக்கிழமை" என்று ஒரு அசரீரி கேட்கிறது. அது வேறு யாருமல்ல, நம்ம நிரூபன்தான். "சகோ(தரி), லைவ் ப்ரோக்ராம் தொடங்கப்போகுது. சக்கரை புக்கை தயார் ஆகிடுச்சான்னு பாருங்கோள்". 

"என்னாது சக்கரை புக்கையா? ஓடுலே மக்கா ஓடுலே" என்று சி.பி.யை தள்ளி விட்டு ஓடுகிறார் மனோ. லேனா தமிழ்வாணன் அன்பளிப்பாக குடுத்த கூலிங் கிளாஸ் உடைந்ததில் மனம் வெம்பியவாறு பந்தியை நோக்கி சிபி செல்ல அனைவரும் பின்தொடர்கின்றனர். அந்த நேரம் பார்த்து கரண்ட் வேறு கட் ஆகிவிட வேர்த்து வழிய அனைவரும் இலையை பார்த்தவண்ணம் உள்ளனர். முதலில் சக்கரை புக்கை, பிறகு அவியல், பொரியல் செம மெனு. மனோவின் கர்சீப்பை திருடி முகத்தை துடைத்துவிட்டு மீண்டும் அதே இடத்தில் வைக்கிறார் சிபி. முதல் உருண்டை சோற்றை உள்ளே தள்ளும் நேரம் ஒரு கை தடுக்கிறது மனோவை. அவர்தான் தமிழ்வாசி பிரகாஷ், "சார் பஹ்ரைன்ல வெயில் எத்தனை டிகிரி? உங்க ஊரு ஹோட்டல்ல குஷ்பு இட்லி கிடைக்குமா? தலைல டை அடிச்சிட்டு கழுத்துல டை கட்டுறது ஏன்?" என பேட்டிக்கான  கேள்விகளை அடுக்குகிறார். 

"தம்பி கடைசியா பஹ்ரைன் பார்டர்ல சாப்பிட்டது. செம பசில இருக்கேன். ப்ளீஸ்" என கெஞ்சிக்கதறுகிறார் மனோ. பாவம் என்று பிரகாஷ் அவரை ரிலீஸ் செய்கிறார். எல்லாரும் உண்ண ஆரம்பிக்கும் நேரம் ஓடி வருகிறார் ஆபீசர் சங்கர். "சாப்பிடாதீங்க நிறுத்துங்க. இங்க நிறைய பேர் கையை டெட்டால் போட்டு கழுவலை. பின்கீயா, கஜ்மோயா போன்ற பாக்டீரியா இருக்கும். கைய கழுவிட்டு வாங்க" என்கிறார். மனோவுக்கு மண்டை காய்கிறது "ஏங்க ஆபீசர். உங்க கடமை உணர்ச்சிக்கு ஒரு அளவே இல்லையா. அந்நியன் அம்பி மாதிரி இப்படி டார்ச்சர் பண்றது என்ன நியாமுங்க ஆபீசர்" என்று கண்கள் சிவக்க பார்த்துவிட்டு செல்கிறார். கைகளை சுத்தம் செய்துவிட்டு அனைவரும் ஒரு வழியாக உண்டு முடிக்கின்றனர். 

மனோ மட்டும் முதலில் சாப்பிட்டுவிட்டு கீழே வந்து அமர்கிறார். இதுதான் தருணம். சி.பி.யின் கோக்குமாக்கான மூளை வேலை செய்ய ஆரம்பிக்கிறது.  பின் பக்க சுவர் ஏறி குதித்து லாரியில் இருக்கும் தக்காளிகளை அள்ளி மனோ மீது கொலைவெறியுடன் வீச ஆரம்பிக்கிறார். "அய்யய்யோ.. மக்கா.. காப்பாத்துலே காப்பாத்துலே" என்று மனோ கூவ, மேலே இருந்து அனைவரும் கைதட்டி சந்தோசமாக வேடிக்கை பார்க்கின்றனர். சித்ரா அவர்கள்  "இப்படித்தான் அட்லாண்டால தக்காளி திருவிழா அடிக்கடி நடக்கும்" என்று சொல்ல, இம்சை அரசன் பாபு மனோவுக்கு அரிவாளை தூக்கி எறிகிறார். வெறிகொண்ட வேங்கையாக சிபியை நெல்லை வீதிகளில் மனோ துரத்துகிறார். அந்த வழியில் திரிஷா ஷூட்டிங் நடப்பதை கண்ட சிபி "என்ன மேடம் இங்க?" திரிஷா "சாமி படம் ஹிந்தில எடுக்கறாங்க" என்கிறார். அவரை மொபைலில் போட்டோ எடுத்துக்கொண்டே ஒலிம்பிக் 100 மீட்டர் வேகத்தில் ஓட்டம் பிடிக்கிறார் சிபி.

                                                                   
அவரை பிடிக்க முடியாத கடுப்பில் பங்கு ஆட்டோ பிடித்து ஹோட்டலுக்கு வருகிறார் மனோ. மேடையில் மைக்கை பிடிக்கும் சங்கர் "இந்த சந்திப்பு நல்லா நடக்கும். அதுல சந்தேகம் இல்ல. அடுத்த வருஷம் எங்க மீட் பண்ணலாம்?" என்று கேட்கிறார். லைவாக நிரூபன் வருகிறார், "சகோ. அடுத்த மீட்டிங்கை அமெரிக்கால வைப்போம். அனைவரும் டிஸ்னிலான்ட் போவோம். சித்ரா அக்கா செலவு செய்வார்கள்" என்று சொல்ல, தலை சுற்ற ஆரம்பிக்கிறது மேடமுக்கு "அடப்பாவி நிரூபா. டிஸ்னிலான்ட் என்ன தமிழ்நாட்ல இருக்குற குவீன்ஸ்லாண்டுன்னு நினைச்சியா? நான் என்ன மனோ மாதிரி மல்டி மில்லியனரா?. எல்லாரும் பஹ்ரைன்ல அவர் ஹோட்டலுக்கு போயி ஓசில ஸ்டே பண்ணலாம்" என் மனோவை கோர்த்துவிடுகிறார் சித்ரா. 

அனைவரும் மனோ இருக்கும் திசையை நோக்க நெல்லை பார்டரை தாண்டி ஸ்பைடர்மேன் போல பறந்து காணாமல் போகிறார் அண்ணன்!

                                                               
                           மீண்டும் 2012 - ல்  பஹ்ரைன் மனோ ஹோட்டலில் சந்திப்போம். 

............................................................................


கற்பனை:




Wednesday, May 18, 2011

நையாண்டி பவனில் பிரபல "பிராப்ள" பதிவர்கள்...!!!


(இந்தப்பதிவு முழுக்க முழுக்க நகைச்சுவைக்காக எழுதப்பட்ட கற்பனை... சிரிங்க... சீரியஸா எடுத்துக்காதீங்க...)

நையாண்டி பவனில் ஒருநாள்...

கவுண்டமணி: டேய் தயிர்வடை தலையா...

செந்தில்: அண்ணே...

கவுண்டமணி: என்னடா வரவர நம்ம ஹோட்டலுக்கு ஒருத்தனும் வர மாட்டேங்குறான். எல்லாரும் குடும்பத்தோட போயஸ் கார்டனுக்கு பொக்கே குடுக்க போயிட்டானுங்களா...?

செந்தில்: அது வந்துண்ணே...

கவுண்டமணி: என்ன வந்து போய்... முழுங்காம சொல்றா...

செந்தில்: நம்ம கடை சமையக்காரங்க எல்லாம் ஸ்ட்ரைக் பண்றாங்கண்ணே...

கவுண்டமணி (ஜெர்க்காகி): எது ஸ்ட்ரைக்கா...? படுவா அந்த எட்டு பேரையும் இங்க வரச்சொல்லுறா... நான் பார்த்தாகனும்...

செந்தில்: ஆகட்டும்ண்ணே...

(அடுத்த பத்து நிமிடத்தில் சமையல்காரர்கள் அனைவரும் கவுண்டருக்கு பயந்து வரிசையில் வந்து நிற்கிறார்கள்)

செந்தில்: அண்ணே... இவர் பேரு விந்தை மனிதன்... வேலைக்கு சேர்ந்ததுல இருந்து ஒருமுறை கூட சமையல் செஞ்சதில்ல...

கவுண்டமணி: என்னது விந்தைமனிதனா...? யோவ் பொறக்கும்போது என்ன ரெண்டு கொம்போட பொறந்தியா...?

விந்தைமனிதன்: நைட் சர்வீஸ் பஸ் வுடுறேன்... வந்து ஏறிக்கோங்க...

கவுண்டமணி: ஹே ராஜா... கஸ்டமர் இலைல பாயசம் விடச்சொன்னா நீ பஸ் வுடுறியா... மவனே இரு உன்ன...

கவுண்டமணி: ஏன்ய்யா நாஞ்சில் சம்பத் கிட்ட பேட்டி எடுத்தியே... அத ப்ளாக்ல போட்டியா...

விந்தைமனிதன்: இதோ இப்ப போட்டுடுறேன் தலைவா...

கவுண்டமணி: யோவ் எலக்சன் ரிசல்ட் வந்து ஒருவாரம் ஆச்சு... ஊசிப்போன வடையை போட்டு ஊரை எமாத்தப் பாக்குறியா...

விந்தைமனிதன்: கொங்கை முகங்குழையக் கூந்தல் மழைகுலைய...

கவுண்டமணி: ஆ... அப்பா... கவிதை சொல்ல ஆரம்பிச்சிட்டானே... இந்தாளை போகச்சொல்லுங்கடா...

கவுண்டமணி: டேய்... ஆசிட் வாயா அடுத்த ஆளை வரச்சொல்லு...

செந்தில்: அண்ணே... இவரு அஞ்சாசிங்கம் கம் அறிவியல் விஞ்ஞானி...

கவுண்டமணி: ஆமாம்... சாம்பார்ல விழுந்த பெருச்சாளியை கண்டுபுடிச்சவனெல்லாம் விஞ்ஞானின்னு சொல்லிக்க வேண்டியது...

அஞ்சாசிங்கம்: பூமி உருண்டையில்லை அது தட்டையா இருக்கு... உங்களுக்கு தெரியுமா...?

கவுண்டமணி: இப்ப நான் அடிக்கிற அடியில உன் மூஞ்சி தட்டையாகிடும் தெரியுமா...

அஞ்சாசிங்கம்: கிரேக்க வரலாற்றில் என்ன சொல்லியிருக்காங்கன்னா.....

கவுண்டமணி: அடேய் ஆப்பத்தலையா... இது சரிப்பட்டு வராது... அந்த சிராஜுதீனை கூப்பிட்டு விடு...

(அஞ்சாசிங்கம் ஆள விடுங்கடா சாமி.. என்று தலைதெறிக்க ஓடுகிறார்...)

செந்தில்: அண்ணே... அடுத்ததா உங்க பங்காளி பன்னிக்குட்டி வந்திருக்கார்...

கவுண்டமணி: பங்காளியாவது கிங்காளியாவது... ஒரு உறையில ஒரு கத்தி தான் இருக்கணும் தெரியுதா...

பன்னிக்குட்டி: மங்கிஸா கிங்கிஸா... கிங்கிஸா பாயாஸா...

கவுண்டமணி: அடேய் மஞ்சத்துண்டு மண்டையா... இவன் என்னடா சொல்றான்...

செந்தில்: ஆப்பிரிக்கா பாஷைல அவர் உங்களுக்கு தம்பி மாதிரின்னு சொல்றாரு அண்ணே...

கவுண்டமணி (மனதிற்குள்): அதானே... ஆப்பிரிக்கா பாஷை எல்லாம் உனக்குத்தானே தெரியும்...

கவுண்டமணி: மீ அண்ணா... யூ தம்பி... டச் பண்ணிட்டீங்களே தம்பி... நல்லா இருங்க... ஆனா கடைக்கு வர்ற கஸ்டமருக்கு மரநாய் கக்காவுல காப்பி போட்டு தர்றீங்களாமே... அதை மட்டும் செய்யாதீங்க... சரிங்களா...

பன்னிக்குட்டி: சரிங்ண்ணா...

கவுண்டமணி: த நெக்ஸ்ட்...

செந்தில்: இவங்க ஹைக்கூ அதிர்வுகள் ஆனந்தி...

கவுண்டமணி (மனதிற்குள்): ஹை லேடீஸ்... லேடீஸ்...

கவுண்டமணி: என்ன அதிரவே இல்லை... அதுசரி நீங்க எந்த ஊரு மேடம்...

ஆனந்தி: நாங்கெல்லாம் மதுரக்காரைங்க... தங்கமானவங்க...

கவுண்டமணி: அப்ப சென்னைல இருக்குறவங்க எல்லாம் தகரமா... நாட்டுல ரொம்ப பேர் இப்படி சொல்லிட்டு திரியுறீங்க...

ஆனந்தி: புள்ளைக்கு பரீட்சைங்க...

கவுண்டமணி: மேடம்... எக்ஸாம் முடிஞ்சி எலக்குஸன் ரிசல்ட் எக்ஸாம் ரிசல்ட் எல்லாம் வந்தாச்சு... இந்த டக்கால்ட்டி வேலையெல்லாம் இங்க வேணாம்... இன்னும் ஒரு வாரத்துல வேலைக்கு வந்து சேருற வழிய பாருங்க...

செந்தில்: அடுத்து வந்திருக்காங்க... கொஞ்சம் வெட்டிப்பேச்சு சித்ரா...

கவுண்டமணி: எது கொஞ்சம் வெட்டிப்பேச்சா...? இவங்க பேச ஆரம்பிச்சா நிறுத்த மாட்டாங்களே...

சித்ரா: புயல் அடிச்சது... பேய் மழை பெஞ்சது... மரங்கள் விழுந்துச்சு... வேலிகள் பறந்துச்சு...

செந்தில்: கவித... கவித...

கவுண்டமணி: டேய் ஒபாமா வாயா... இதுக்கு முன்னாடி நீ கவிதையே வாசிச்சது இல்லையா...

சித்ரா: Actually what im trying to say is…

கவுண்டமணி: தாயி... நீங்க எதுவும் சொல்ல வேண்டாம்... எவ்வளவு நாள் வேணும்னாலும் லீவ் எடுத்துக்கோங்க... ஆனா திரும்ப வரும்போது பீஸா, பர்கர் ரெசிபி எல்லாம் கத்துட்டு வாங்க... நம்மூரு கஸ்டமருங்க எவ்வளவு நாளைக்குத்தான் புளியோதரையும் பொங்கலும் சாப்பிடுவாங்க...

செந்தில்: அண்ணே... இவரு மெட்ராஸ் பவன் சிவக்குமார்...

கவுண்டமணி: வா ராஜா... நம்ம நையாண்டி பவனுக்கு போட்டியா...

சிவக்குமார்: ஐயோ அதெல்லாம் இல்லீங்க...

கவுண்டமணி: மண்டையா... பையன் பாக்குறதுக்கு அம்மாஞ்சியா இருக்கானே... ரொம்ப நல்ல பையனோ...

செந்தில்: ஆமாண்ணே... யாருமே இல்லாத கடையில யாருக்கோ டீ ஆத்துனவரு இவர் தாண்ணே...

கவுண்டமணி: வெளக்கெண்ணை கருப்பா... புரியுற மாதிரி சொல்லுடா...

செந்தில்: அண்ணே... நம்ம ஹோட்டல் மூடாம இருக்குறதுக்கு காரணமே இவர் தான்...

கவுண்டமணி: அப்படியா...? அப்படின்னா தம்பி நீங்க கல்லாவுல போய் உக்காருங்க... ஆனா இது நாலு பேரு வந்துபோற இடம் டிக்கிலோனால்லாம் விளையாடாதீங்க...

செந்தில்: அண்ணே... இவருதான் பிரபல பதிவர் பிலாசபி பிரபாகரன்...

கவுண்டமணி: ஓ... பெரிய்ய்ய தத்துவஞானி சாக்ரடீஸ்... சொறி புடிச்ச மொன்னை நாயி நீயெல்லாம் எதுக்குடா அடைமொழி வச்சிக்குற... அதுசரி... நீ என்னவோ கடைக்கு வர்ற கஸ்டமரை எல்லாம் கெட்டவார்த்தைல திட்டுறியாமே...???

பிலாசபி பிரபாகரன்: அண்ணே... நான் சின்ன பையன்... நீங்க திருத்தக்கூடாதா...?

கவுண்டமணி: ஒன்ன மாதிரி நாட்டுல 80 கோடி பேர் இருக்கானுங்க... ஒங்கள திருத்துறது என் வேலை இல்ல... மொதல்ல நான் என்னை திருத்திக்கிறேன்...

பிலாசபி பிரபாகரன்: இப்படித்தான் மகாத்மா காந்தி ஒருமுறை...

கவுண்டமணி: வாயை மூடுறா கழுதை வாயா... என்னடா தள்ளாடிக்கிட்டே நிக்கிறே... ஒயின்ஷாப்ல இருந்து நேரா வர்றியா...?

பிலாசபி பிரபாகரன்: உவ்வே...

கவுண்டமணி: அய்யா ராஜா... அப்படி ஓரமா உன்னோட ஒயின்ஷாப்ல போயி வாந்தி எடு... இங்க வேணாம்...

செந்தில்: அண்ணே... கடைசியா ஒருத்தர் வெயிட்டிங்...

கவுண்டமணி: வரசொல்லுடா...

செந்தில்: இவரு கே.ஆர்.பி.செந்தில்... மிகப்பெரிய தொழிலதிபர்...

கவுண்டமணி: நாட்டுல இந்த தொழிலதிபருங்க தொல்லை தாங்க முடியலடா... குண்டூசி விக்கிறவனெல்லாம் தொழிலதிபர் ஆயிடுறான்...

கே.ஆர்.பி: சொல்லுங்க தம்பி...

கவுண்டமணி: டேய் இடியாப்ப தலையா... என்னடா இவன் என்னைப் பார்த்து தம்பின்னு சொல்றான்...

செந்தில்: அண்ணே... இவர் எல்லாரையும் தம்பின்னு தான் கூப்பிடுவார்....

கவுண்டமணி: அப்படிங்களா அண்ணா... உங்க பேரு என்னங்கண்ணா...?

கே.ஆர்.பி: செந்தில்...

கவுண்டமணி: கொஞ்சம் சத்தமா சொல்லுங்க...

கே.ஆர்.பி: செந்திலு...

கவுண்டமணி: அப்படியே அந்தப்பக்கம் திரும்பி நின்னு இன்னும் சத்தமா சொல்லுங்க...

கே.ஆர்.பி: செந்திலுங்கோ...

(கவுண்டமணி தனது சகா செந்திலை வழக்கமாக எங்கே மிதிப்பாரோ அங்கே கே.ஆர்.பி.செந்திலை மிதிக்க சமையல்காரர்கள் குழு எஸ்கேப்....)

கற்பனை: பிலாசபி பிரபாகரன்