Wednesday, August 31, 2016

இரண்டு மருத்துவர்களும் ஒரு செங்கல் சைக்கோவும் ! - கழுகார்

பாரதிக்கு கண்ணம்மா... நீயெனக்கு உயிரம்மா... பழைய விஜய்ண்ணாவைப் போல தலையை ஆட்டியபடி உள்ளே நுழைந்தார் கழுகார்.


என்ன கழுகாரே ஆளையே பார்க்க முடியவில்லை என்றோம்.

பறவையோட குணமே பறக்குறதுதான்... அதை பறக்க விடுங்கம்மா.. என்றபடி ஏற்கனவே யோசித்து வைத்திருந்த டயலாக்கை பேசிவிட்ட பெருமையில் மிளிர்ந்தார்.

சரி சரி விஷயத்துக்கு வாங்க... என்றோம்.

மாசக்கடைசி. கோஹிபா கட்டுப்படியாகவில்லை. சாக்லேட் ஃப்ளேவர்ட் சிகார் ஒன்றை பற்ற வைத்தபடி தொடங்கினார் கழுகார்.

ஒரு முன்னாள் பதிவர்... என்றபடி இழுத்தார்.

பதிவருன்னாலே முன்னாள் தானே... மொக்கை போடாம விஷயத்துக்கு வா கழுகே... செல்லமாக கண்டித்தோம்.

மனுஷனுக்கு ஏழு கழுத வயசாகியும் காதல் பிசாசு பிடிச்சு ஆட்டிண்டிருக்கு...

ஏன் வயசானா காதல் வரக்கூடாதா ஓய்...

தாராளமா வரலாம்... ஆனால் மனுஷன் செய்யுற வால்த்தனத்துக்கு ஒரு அளவில்லையோ... ஆ ஊன்னா தண்ணியப்போட்டு சலம்புனா எப்படி ? அதுவும் ஃபேஸ்புக்கில்...

அதுகூட பரவாயில்லை... அவருடைய காதலி என்று ஒரு கேரக்டர் வருதில்லையா... அதுவே ஒரு புனைவாம்...

ஆஹான் என்றோம் கோரஸாக...

பழைய நிஜக்காதலியின் பொறாமைத்தீயை கிளறி மீண்டும் இன்பமாய் குளிர் காய்வதே அய்யாவின் திட்டமாம்...

ஓஹோ

அது மட்டுமில்லை... கருப்பன் குசும்புக்காரன் சைடுல மீன்குழம்புக்கும் ஆசைப்படுறானாம்... அது நெத்திலியா இருந்தா பரவாயில்லை திமிங்கலமாச்சே...  தூண்டில்ல சிக்குமா...?

போதும் நிறுத்தும்... புதிய செய்தியை கொண்டுவரச் சொன்னால் இறந்து புதைத்த செய்தியை கொண்டு வருகிறீர்களே... இதான் உங்க டக்கா...? என்று எக்காளமிட்டோம்.

கழுகாரின் முகம் வாடியது.. நீண்ட இழுப்பு ஒன்று இழுத்தார்... சிகார் முனையில் கங்கு மிளிர்ந்தது...

குறும்படம் எடுக்கக் கிளம்பிய நம் பதிவுலக மணிரத்னங்களின் கதை தெரியுமா...?

ஓ... அது ரொம்ப பழைய கதையாச்சே...

இல்லை... இது புதுக்கதை... சாக்லெட் புகை அறையெங்கும் படர்ந்தது.

யாருக்கும் பயப்படாத அந்த பதிவர், ஒரு பயங்கரமான ஸ்க்ரிப்ட் வைத்திருக்கிறாராம்... பதிவுலகில் லந்து பண்ணிக்கொண்டிருக்கும் இரண்டு மருத்துவர்களையும் ஒரு சைக்கோவையும் மனதில் வைத்து அந்தக்கதையை புனைந்திருப்பதாக அவரே சொல்கிறார்...

இரண்டு மருத்துவர்கள் என்றால் அவங்க ரெண்டு பேர்தானே என்றோம் ஜாடையாக.

கண்ணடித்து உறுதி செய்தார் கழுகார்.

சரி கதைய சொல்லுங்கோ என்று கொக்கி போட்டோம்.

அத மட்டும் வெளிய சொல்லக்கூடாதுன்னு டைரக்டர் சத்தியம் வாங்கியிருக்கார்... ஆனா அதிர்ச்சி மதிப்பீடுகள் இருக்குமாம்...

சரியா போச்சு போங்க...மருத்துவ சமூகத்தை யாராச்சும் கீறிவிட்டுட்டா தஞ்சாவூரு பொம்மையாட்டம் தவிப்பாரே அந்த டாக்டர்...

அவராச்சும் பரவாயில்லை... மூக்கு புடைப்பானவர்கள் ஏன் இப்படியெல்லாம் யோசிக்கிறார்கள் என்று ஏராளமான ஆங்கில ஜார்கன்ஸ் கலந்து, புல்லட் பாயிண்ட்ஸ், புள்ளி விவரங்கள் போட்டு சைக்காலஜிக்கல் அனாலிஸிஸ் செய்வாரே அந்த இன்னொரு டாக்டர் அதை நினைத்தால்தான் எனக்கு கெதக்கென்று இருக்கிறது... கழுகாரின் கண்களில் மரண பயம் தெரிந்தது.

சைக்காலஜிக்கல் அனாலிஸிஸ்ன்னு சொன்னதும் ஞாபகம் வருது... கதையில் ஒரு சைக்கோவும் இருக்குறதா சொன்னீங்களே... அது யாராக்கும், பதிவுலகில் நிறைய சைக்கோக்கள் இருக்கிறார்களே... நைஸாக நூல்விட்டு பார்த்தோம்.

சிகாரை ஆஷ்ட்ரேயில் பொசுக்கிவிட்டு, தலைமுடியை சிலுப்பியபடி விருட்டென்று பறந்தார் கழுகார்...!