Saturday, December 24, 2011

ஈரோடு பதிவர் சந்திப்பு - ஜாலி பட்டாசுகள் பார்ட் 2


உணவு, சந்திப்பு, உயரிய கொள்கை: 

ஞாயிறு காலை உணவருந்த, நிகழ்ச்சி நடைபெறும் இடத்திற்கு விரைந்தோம். சீனா ஐயா, தருமி, ப.கந்தசாமி போன்ற சீனியர்கள் அங்கு ஆஜர். ஷர்புதீன், வீடு சுரேஷ், தமிழ் பேரன்ட்ஸ் சம்பத், தமிழ்வாசி பிரகாஷ், யுவகிருஷ்ணா மற்றும் பிற நண்பர்களை சந்தித்தேன். நாய் நக்ஸ் ஒரு இட்லியை கையில் எடுத்து முன்னும் பின்னும் சில நொடிகள் திருப்பி பார்த்தார். ஏனோ தெரியவில்லை. பிறகு அனைவரும் வெளியே வருகையில் ஆறடி உயரத்தில் ஜிம் பாடியுடன் ஒருவர் வந்தார். நெற்றியில் விபூதி குங்குமம். அட நம்ம சிபி!! மொத்தமாக நிகழ்ச்சி நடந்த ஹாலுக்கு நுழைந்தோம்.

                               ஈசன்(பிரபா), சங்கவி, மோகன் சார், ஆரூர் முனா, கேஆர்பி                   

போட்டோ குறிப்பு:
ஈசன் இடுப்பளவை சரிபார்க்கும் சங்கவி, ஈசன் நீள்முடி கண்டு பொருமும் கேஆர்பி.

கடைசி வரிசையில் பிரபல பதிவர்களுக்கு தனிஇடம் ஒதுக்கி இருந்தனர். சிபி அங்கே போய் அமர்ந்து கொண்டார். நக்கீரன், தமிழ்வாசி பிரகாஷ் ஆகியோர் 'ஹல்லோ இங்க வாங்க' என்று அதட்ட என் அருகே அமர்ந்தார் சிபி. 'நீங்க நம்ம ஆளு. இங்க உக்காருங்க. கலகலப்போம்' என்றோம். திடுதிப்பென கேமரா ஷூட்டை ஆரம்பித்தார் தமிழ்வாசி. 'என்ன போட்டோ எடுத்தா, அதை நாலு நாளைக்கு பாத்து விடாம சிரிப்பீங்க. வேண்டாம்' என்றாலும் மனிதர் அசரவில்லை. வேறுவழியில்லை என்றதும், சிபியிடம் இருந்த கூலரை இரவல் கேட்டு போஸ் குடுத்தேன். என்னைப்பார் யோகம் வரும்!! 

                                         ஈசன் (எ) பிரபாகரன், டாக் லிக்ஸ் நக்கீரன், நான்.  

பொதிகை டிவி செய்தி வாசிப்பாளரை கண்டதும் கேமராவுடன் பறந்தார் சிபி. அப்போது நக்கீரர் அடித்த கமன்ட்: 'உக்காந்திருந்த கில்மா எந்திரிச்சி போகுது'. அடிக்கடி சிபி போயும்,வந்தும் கொண்டிருந்தார். நாங்கள் வேறு டாபிக் பேசினாலும் 'என்னைத்தானே கிண்டல் பண்ணீங்க' என்று கேட்டார். முதல்ல டாக்டரை பாருங்க தல. நக்ஸை பார்த்து கேஆர்பி "இத வச்சி சீக்கிரம் பதிவு போட ஆரம்பிங்க". நக்ஸ் "பதிவு போட்டுட்டுதான் ஈரோடே வந்தேன்". கிறுகிறுத்தார் கேஆர்பி. நக்ஸ் அண்ணனிடம் கஸாலி போனில் பேசிக்கொண்டே பதிவு போட்டார். ''நக்கீரரே, நீங்க பேசுவதை லைவ்வாக போஸ்ட் போடுகிறார் கஸாலி'' என்றதும் கதிகலங்கி பார்த்தார் நக்ஸ். ரோகினி சிவா மற்றும் சிலரை பார்த்தோம்(சிலர் பெயர் மிஸ் ஆகி இருந்தால் மன்னிக்க).

                             மீல்ஸ் அடிக்கும் 'சென்னை செல்லம்' ஆரூர் முனா செந்தில்              

சிபியின் ஜிம் பாடி கண்டு சற்று ஜெர்க் ஆனேன். "சார். ஜிம்முக்கு போவீங்களா? உங்கள பத்தி யார்னா தப்பா எதுனா சொன்னா/எழுதுனா கோச்சிப்பீங்களா?". சிபி "டெய்லி ஒடம்ப முறுக்கேத்துவேன். என்ன திட்டுனாலும் டென்ஷன் ஆவ மாட்டேன்" என்றார் ட்ரேட்மார்க் சிரிப்புடன். வெட்டியாக நேரத்தை வீணாக்க விரும்பாமல் நான், தமிழ்வாசி, நக்கீரர் இணைந்து கொள்கைத்தீர்மானம் நிறைவேற்ற ஆரம்பித்தோம். மினி ஜடா முடியுடன் பிரபாகரன் திரிந்து கொண்டிருந்தார். என்ன கொள்கை? இந்த பதிவர் சந்திப்பு குறித்து எத்தனை பதிவு போடலாம்? வேறன்ன. "அடுத்த ஊரில் பதிவர் சந்திப்பு நடக்கும் வரை ஈரோடு சந்திப்பு பற்றிய பதிவுகளை போட்டுக்கொண்டே இருக்கலாம்", "ஈரோடு தொடர்பதிவு போடலாம்", "முதல் 24 பதிவுகளில் ஊரைவிட்டு ஈரோடு வந்தது குறித்து பதிவிடலாம். வெள்ளிவிழாப்பதிவில்தான்  நாம் சந்தித்ததை பதிவிட ஆரம்பிக்க வேண்டும்", "வேண்டாம். ஈரோடு பதிவர் சந்திப்பு எனும் பெயரில் தனியாக ஒரு வலைப்பூ ஆரம்பித்து அதில் 365 பதிவுகள் போடலாம்" என சமூக அக்கறை நிறைந்த, உன்னதை ஐடியாக்களை அள்ளி வீசினர்.  

நக்ஸ் அண்ணன் மொபைலில் மனோ 'சாட்'டடித்தார். நான் என்று சிபியையும், அவரென்று என்னையும் நக்கல் அடித்தார். எப்படிண்ணே  இப்படி?

                                                        சிறப்பு உறுப்பு தள்ளுபடி 


சீமான் ரசிகர் படை, ங்கொய்யா:  
  
சந்திப்பு ஒருவழியாக முடிந்து எல்லாருக்கும் டாட்டா காட்டிவிட்டு ஈரோடு ரயில் சந்திப்பை அடைந்தோம். வாசலில் மேலே இருந்த விளம்பரத்தை பார்த்ததும் அசந்தே போனோம். தள்ளுபடி விலையில் சிகிச்சை பெற தள்ளாதபடி ஓடுமாறு உங்களை கேட்டுக்கொள்கிறோம். இரவு உணவு சாப்பிட வெளியே வந்தபோது "தம்பி(கேஆர்பி) இந்த காரை தள்ளுங்க. ப்ளீஸ்" என  காரில் இருந்து வயதான அம்மா குரல் தந்தார். சீமானின் ரத்தவெறி ரசிகர் படை காரை தள்ள ஆரம்பித்தது. கார்  தள்ளாமல் இந்த சரித்திர காட்சியை  படம் பிடித்த பிலாசபி, உனக்கு இருக்குய்யா ஒரு நாளைக்கி!

                                   'ஆ..தள்ளு தள்ளு தள்ளு' - நான், ஆ.மு.செ, கேஆர்பி

'லேசா லேசா' என சிக்னல் காட்டி டாஸ்மாக் செல்ல பர்மிஷன்/நிபந்தனை  கேட்டனர்/போட்டனர் மூவர். அவர்களுடன் சோமபான கடைக்கு சென்றேன். . பத்தாவது இறுதித்தேர்வு எழுத இருக்கும் மாணவர்களைப்போல் படு சீரியசாக பெஞ்சுகளில் குத்த வைத்தவாறு ஆலோசனை செய்து கொண்டு இருந்தனர் ஈரோட்டு வாசிகள். பெரியார் இருந்திருந்தால் பிரம்பாலேயே பின் பக்கம் பழுக்க அவர்களை கிளப்பி பட்டையை கிளப்பி இருப்பார். வாழ்க சனநாயகம்.

நமக்கு வழக்கம்போல பெப்புசி. சரக்கு பாட்டில் கழுத்தை ஆரூர் முனா ஒரே திருப்பில் நெறித்து ஓப்பன் செய்ததை கண்டு மலைத்தோம். "சைட் டிஷ் என்ன இருக்கு?" என பிலாசபி வினவ "ங்கொய்யா" என்றார் டாஸ்மாக் அண்ணன். முடியை சிலுப்பியவாறு "கொய்யாவா?" என கத்தினார் பிரபா. இதற்கு முன் இருவருக்கும் ஏதோ சண்டை போல என எண்ணினோம். தாகசாந்தி செய்த மூவருடன் வெளியே நடக்க ஆரம்பித்தபோது டாஸ்மாக் கிச்சனை அந்நியன் முடியை ஒதுக்கிவிட்டு எட்டிப்பார்த்தார் பிலாசபி. அங்கே ஆரஞ்சு மற்றும் கொய்யா பழங்களை கண்டதும்தான் அவருக்கு விஷயமே புரிந்தது. இல்லாவிடில் அவருக்கு வந்த கோவத்திற்கு டாஸ்மாக் அண்ணனை செவுலில் அறைவது போல் கற்பனை செய்து கொண்டு சுவரேறி குடித்து ஓடி இருப்பார்!!

அளவுக்கு மீறி தண்ணி அடித்த நான்
                            
ஈரோடு போகையில்தான் அரக்க பறக்க ரயிலை பிடித்தோம் என்றால் திரும்பி செல்லும்போதும் அதே போல ஓட வேண்டிய நிலை. தமிழ் சினிமா க்ளைமாக்ஸ் தோத்தது போங்க. இம்முறையும் டிக்கட் பிரச்னையால் தனி கோச்சில் ஆரூர் முனா வர வேண்டிய கட்டாயம். தம்மாதூண்டு வயதில் கடைசியாக ஊருக்கு ரயிலேறிய பிறகு ஈரோடு பதிவர் சந்திப்புதான் என்னை மீண்டும் ரயிலேற்றியது. தூங்கும் முன் ஜன்னலருகே இருந்த தண்ணீர் பாட்டிலை எடுத்து மொடக்கென்று நீர் குடித்தேன். 'ரயிலில் இலவசமாக தண்ணீர் தருவது நல்ல விஷயம்' என்றதற்கு பிரபகாரன் 'யோவ். அது கீழ் பெர்த்ல இருக்குற ஆளோட தண்ணியா. மொத்தத்தையும் காலி பண்ணிட்டோம். விடிஞ்சா சிக்குனோம்' என்று அலாரம் அடித்தார்.

விடியும் வரை அந்த திகில் வேறு. சென்னை வந்ததும் எல்லாரும் இறங்க ஆரம்பிக்கையில் 'தண்ணீர் பாட்டில் ஓனர்' மட்டும் செவ்வாய் கிரகத்திற்கு சென்று கொண்டிருந்தார். சும்மா இல்லாமல் இந்த பிலாசபி அவரை எழுப்பி 'ஹல்லோ..சென்னை வந்துடிச்சி' என்றார். அதற்கு கேஆர்பி சொன்னது  ''சென்னை வரலை. நாம்தான் சென்னைக்கு வந்தோம்''.  எங்க அந்த நபர் தூக்கம் தெளிஞ்சி ''எவன்டா கடைசி சொட்டு வரை விடாம உள்நாக்கால என் தண்ணிய நக்குனது" என்று வெறி ஆவாரோ எனும் அச்சத்தில் பிளிறிய என் நிலையை புரிந்து கொள்ளாமல் இருவரும் டமாசு செய்ததை மறக்கவே முடியாது.

என்றும் மனதில் நிற்கும் இனிய தருணங்கள். பதிவர் சந்திப்பை தவற விட்ட மக்களே, அடுத்த முறை இணையுங்கள். சந்தோஷங்கள் பல காத்திருக்கும். விரைவில் சென்னை புத்தகக்கண்காட்சியில் சந்திப்போம். பக்கம் பக்கமாக  பல்லாயிரம் பதிவுகளை  தேத்துவோம்!! ஓம்!!!


வாழ்த்துகள்.
கவுண்டமணி - செந்தில் ரசிகர் மன்றம் 
....................................................................................
                   
Posted by:
! சிவகுமார் !
                                                                    
                                           

Tuesday, December 20, 2011

ஈரோடு பதிவர் சந்திப்பு - ஜாலி பட்டாசுகள்!


சிக்கு புக்கு: 

சென்னை சென்ட்ரலில் இருந்து ஈரோடு செல்லவிருந்த ட்ரெயினை கடைசி நொடியில் ஓடிப்போய் பிடிக்க வேண்டி இருந்தது. கேஆர்பி, 'வீடு திரும்பல்' மோகன்குமார் சார்(முதல் சந்திப்பு), ஆரூர் முனா செந்தில், ரமேஷ்(இவரும் ப்ளாக்கராம், கேஆர்பி தம்பி. செம ரவுசு பார்ட்டி) மற்றும் 'ஈசன்' ஜெராக்ஸ் பிலாசபி பிரபாகரன் என அனைவரும் ஏக் ட்ரெயினுக்குள் ஏறினோம். ப்ரோபைல் போட்டோவில் டெர்ரராக இருந்த ஆ.மு.செ நேரில் மீசை, தாடி எடுத்துவிட்டு 'அந்தக் கொழந்தையே நாந்தான்' ரேஞ்சில் இருந்தார். அதனால் அவரை மட்டும் மழலைகள் சிறப்பு கோச்சில் தனியாக அமர வைக்க வேண்டிய கட்டாயம்.   

                                      படு  பவ்யமாக மோகன்குமார் சார்(டி ஷர்ட்)  

சைக்கிளில் போனால் கூட ஜன்னல் ஓர சீட்டில்தான் அமருவேன் என்று வம்பு செய்யும் எனக்கு இம்முறை அந்த வாய்ப்பு இல்லை. அதை ஏற்கனவே புக் செய்தவர், இடையில் ஏறி (அதாவது 'கொஞ்ச தூரம் தாண்டியதும்'. உங்க புத்தி எங்க போகும்னு தெரியும்) 'அதெல்லாம் முடியாது. ஜன்னல் ஓரத்லதான் 'சிட்'டுவேன்' என்று எனக்கு முதல் ஆப்பு வைத்தார். பக்கத்தில் இருந்த யூத், பெரியவர் மற்றும் சில நடுத்தர வயது பெண்களிடம் மூன்றும் கலந்த கேஆர்பி நாத்திக வசியம் செய்துகொண்டிருந்தார். அவர் எது சொன்னாலும் அதற்கு மினி நாத்திகர் பிராபகரன் 'ஆமா. கரக்ட்' என்று கோரஸ் பாடினார். அவர்களுக்கு பின் சீட்டில் மூன்று இளம் பெண்கள். எந்திரித்து நின்றவாறு இறைநம்பிக்கை சரிதான் என அவருக்கு எதிர்வாதம் செய்ய ஆரம்பித்தேன். நான் ஏதோ சைட் அடிக்கத்தான் நின்று கொண்டு பேசுகிறேன் என அந்த மூன்று பெண்களும் முதலில் தவறாக பார்த்தனர். பேட் கேர்ல்ஸ். ஹவ் டேர்!!

மோகன்குமார் சாரிடம் பதிவுலக மேட்டர்கள் குறித்து பேசுகையில் 'போதும் பொத்து. இந்த பிஸ்கெட்டை வாய்ல அமுக்கு' என குட் டே பிஸ்கெட்டை வாங்கித்தந்தார். ட்ரெயின் ஈரோட்டை நெருங்க ஆ.மு.செந்திலுக்கு சி.பி.செந்தில்(எத்தன செந்தில்டா...செந்திலாண்டவா!!)  கால் கடுக்க நின்று கொண்டு காலுக்கு மேல் காலடித்தார். 'வந்துட்டோம். வந்துட்டோம்' என்று ஆ.மு.செ அல்வா தந்து கொண்டே இருந்தார். வெறியான சிபி யாரையும் பார்க்காமல் சென்னிமலைக்கு மலையேறி விட்டார்(நாலு எக்ஸ்ட்ரா பதிவு அவுட்டு). 

ரூமும், ரூம்பாயும்: 
                                                                       
                                          பரிசு பெறும் எங்கள் சிங்கம் கேஆர்பி   

இரவு ரூமில் நால்வர் தங்க 'உற்சாக' ட்வின்ஸ் பிலாசபி மற்றும் ஆ.மு.செ. இருவருக்கும் தனி ரூம் தந்துவிட்டோம். காலை எழுகையில் பிலாசபி மீது   ஆ.மு.செ. உருண்டு நசுக்கி இருப்பாரோ என்ற திகில் வேறு எனக்கு. இரவு கவிதை வீதி சவுந்தர் போன் அடித்தார். 'உங்களுக்கு ராத்திரி ஒரு மணிக்கு போன் பண்ணி தூங்கவிடாம செய்வேன்' என்றார். 'அது நடக்க வாய்ப்பில்லை. நான் தூங்குறதே காலை 3 மணிக்குதான்' என்றேன். தலைவர் காலை 3 மணிக்கும் போன் செய்தார். அப்படி என்னதான் சார் பண்ணீங்க தூங்காம? காலை எழுந்ததும் தம்மாதூண்டு டம்ளரில் நாலு சொட்டு காப்பியை இட்டுவிட்டு நாங்கள் குடித்த பின் 'இது பில்டர் காப்பி சார். ஈச் கப் ஜஸ்ட் 15 ஓவாய் மட்டுமே' என்று கேஆர்பியின் பி.பி.யை எகிற வைத்தார் ரூம் பாய்(பாய்க்கு வயசு 50 இருக்கும்).

'வம்ப வெலைக்கு வாங்குவோம்ல' மணிவண்ணன்(மதுரை) ஊரிலிருந்து வந்து சேர்ந்தார் எங்கள் ரூமுக்கு. என்னைப்பார்த்ததும் பதற்றத்துடன் அவர் சொன்ன முதல் வசனம் "தெரியாம பிலாசபி, ஆ.மு.செ.  ரூமுக்கு போய்ட்டேங்க. கதவை தெறந்ததும் அப்படி ஒரு நறுமணம். அங்கனயே மயங்கி விழுந்துட்டேன். ரூம் பாய்(!) வந்து மூஞ்சில ப்ளீச் ப்ளீச்னு சோடா அடிச்சி என்னை எழுப்புனாரு. இங்கன ஒடியாந்துட்டேன்' என்றார். பிறகு ரிஷப்சனில் அனைவரும் அமர்கையில் பிரபல பதிவர்கள்/ஓட்டுனர்கள்(பஸ்ஸர்ஸ்) வந்த வண்ணம் இருந்தனர். ப்ரோபைல் போட்டோவில் இருப்பவர்கள் நேரில் வேற லுக்கில் இருந்தனர். ராமமூர்த்தி கோபி சாரை எனக்கு அறிமுகம் செய்தார் மோகன்குமார் சார். யாரென்று அடையாளம் தெரியாமல் முதலில் குழம்பி பிறகு தெளிந்து வணக்கம் போட்டேன். உண்மையான உண்மைத்தமிழன், தனசேகர், வெள்ளுடை வேந்தர் விந்தைமனிதன் உள்ளிட்ட பலரை ரிஷப்ஷனில் சந்தித்தேன்.   

வாசலில் நின்ற எல்லாரையும் தெருவில் நின்று கொண்டு போட்டோ எடுத்தார் தனசேகர் சார். போட்டோ செஷன் முடிந்து அனைவரும் பதிவர் சந்திப்பு நடக்கும் இடத்திற்கு கிளம்ப போகையில் கோபத்தில் கத்தினார் தனசேகர் "*&@#$ என்னை போட்டோ எடுங்கடா'' என்றார். அந்த வார்த்தையை கேட்டபிறகுதான் 'அட இது நம்ம ஜாக்கி' என 100% கன்பர்ம் ஆனது எனக்கு. 
.....................................................................................

ஜிம்பாய் சிபி, ஜாலி தமிழ்வாசி, லொள்ளு நக்கீரன்(நாய் நக்ஸ்), வழக்கம்போல் பல்ப் வாங்கிய நாஞ்சில் மனோ  மற்றும் இனிய நண்பர்கள்...விழா அரங்கில் நடந்த சரவெடி சம்பவங்கள்.

பார்ட் - 2 தொடர்ந்தே தீரும்(தீருமா?!).    
.....................................................................................

..................................
Posted by:
.................................


Monday, November 7, 2011

கலக்கல் நண்பா, நல்ல பகிர்வு, சாட்டையடி


                                                                    
"டேய்..என்னடா பீச்ல உக்காந்துட்டு இருக்க. நம்ம சித்தப்பாவுக்கு சீரியஸ்னு ஹாஸ்பிடல்ல சேத்துருக்காங்க. சீக்ரம் வா போலாம்"

"தகவலுக்கு நன்றி"

"நன்றியா? அண்ணன்கிட்ட எதுக்குடா இதெல்லாம்? எந்திரி..வா..வா.."

கடற்கரை அருகே மீனை ஏலம் விட்டுக்கொண்டு இருந்தனர் சில மீனவர்கள். 

"இன்று என் வலையில்" என தம்பி கத்த, அதைக்கேட்டு சிலர் மீன் வாங்க நம்மாளை சூழ்ந்து கொள்கின்றனர். "ஏங்க..இவன் மீன் பிடிக்கறவன் இல்லைங்க. தயவு செஞ்சி போங்க. ஏண்டா இப்படி பேசிக்கிட்டு இருக்க? நடடா.." என்கிறார் அண்ணன். சில அடிதூரம்தான் கடந்து இருப்பார்கள். 

அப்போது ஒரு பஜ்ஜிக்கடையில் முதலில் போட்ட வடையை சாமி படம் அருகே வைத்து விட்டு வேலையை தொடர்கிறார் வியாபாரி. நம்ம ஆள் அந்த வடையை எடுத்து "முதல் வடை எனக்கே" என்று கூறி லபக்கென வாயில் போட்டுக்கொள்கிறார். வெறியான வியாபாரி ஓடி வந்து பஜ்ஜி சுடும் கரண்டியால் அவர் தொப்புளில் பழுக்க சூடு போடுகிறார். 

அண்ணன் "அடப்பாவி. உனக்கு என்னடா ஆச்சி? மானத்த வாங்கற?"

"முதல் முதல், முதல் மணல், முதல் அலை, முதல் பஜ்ஜி, முதல் கடைசி"

அண்ணன் செய்வதறியாமல் தவிக்கிறார். 'சித்தப்பா பெட்டுக்கு பக்கத்ல இவனுக்கு ஒரு பெட்டை ரெடி பண்ணனும் போல இருக்கே'. இருவரும் பஸ் ஸ்டாப்பை அடைகிறார்கள்.சில நொடிகள் கழித்துப்பார்த்தால் தம்பியைக்காணவில்லை. அருகில் இருக்கும் கோவிலில் செம கூட்டம். 'அட அங்க இருக்கான் தம்பி. சித்தப்பா சீக்கிரம் குணம் ஆக சாமியை வேண்டிக்கறான் போல'. 

"உன் நல்ல மனசுக்கு நீ நூறு வருஷம் நல்லாருப்படா தம்பி. என்ன கும்புட்ட?"

கோவிலில் குடுத்த உண்டைக்கட்டியை காட்டியவாறு தம்பி சொல்கிறான்:

"நல்ல பகிர்வு"

மீண்டும் டென்ஷன் ஆகி அவனை பஸ்ஸில் ஏற்றுகிறான் அண்ணன். 

"டேய்..ஏழெட்டு காலேஜ் பொண்ணுங்க ஏறி இருக்காங்க. சென்ட் வாடை தூக்கலா இருக்கு. எதுக்கும் கொஞ்சம் தள்ளியே நில்லு"

"தமிழ் மணம் 7"

கொஞ்ச தூரம் வந்ததும் ஸ்டேஜ் போடப்படுகிறது. பிதுங்கி வழியும் கூட்டத்தில் வேர்க்க விறுவிறுக்க நடத்துனர் டிக்கட் கிழித்துக்கொண்டிருக்க...

"ரைட்டு" என்கிறார் நம்மாள். வண்டி கிளம்ப..நடத்துனர் கத்த ஒரே கூத்து. அண்ணன் இவனின் வாயைப்பொத்தியவாறு பயணம் செய்கிறார். ஸ்டாப் வந்துவிட்டது. "இருடா. லேடீஸ் மொதல்ல எறங்கட்டும். வெள்ளை சுடிதார் போட்டு இருக்காங்களே..அவங்க பெண் போலீஸ். அவங்கள இறங்க விடு". தம்பி பெண் போலீசின் உடையைப்பார்த்து "நல்ல அலசல், விரிவான அலசல்" என்று கூறித்தொலைக்க, அவன் வாயில் வெற்றிலை பாக்கு போடுகிறார் பெண் போலீஸ். "மேடம், இவன் என் தம்பிதான். மன்னிச்சிடுங்க" என்று சமாதானம் கூறி அனுப்புகிறான் அண்ணன். இருவரும் ஹாஸ்பிட்டலை அடைகிறார்கள். 

"டாக்டர், இப்ப சித்தப்பாவுக்கு எப்படி இருக்கு?"என அண்ணன் கேட்க, காண்டாக்ட் லென்சை கழட்டிவிட்டு சீலிங் பேனை ஒருமுறை பெருமூச்சு இட்டவாறு பார்த்துவிட்டு "ரொம்ப கஷ்டம். ஒண்ணும் செய்ய முடியாது" என்கிறார் டாக்டர். 

"கலக்கல் மச்சி" 

வந்த கோபத்திற்கு தம்பியின் காதில் பொளேரென்று வைத்தான் அண்ணன். 

"என்ன டாக்டர் இப்படி சொல்லிட்டீங்க. லட்சக்கணக்குல செலவு செஞ்சும் இப்படியா? வெளில நிறைய கடன் வேற வாங்கி இருக்கேன்" என்று அண்ணன் விம்மி விம்மி அழும்போது தம்பி அவனை தேற்றுகிறான். 

"என்னடா தம்பி. இருந்த வேலையையும் விட்டுட்டு வி. ஆர். எஸ். வாங்கிட்டேன். அதுவும் ஆஸ்பத்திரிக்கே செலவாயிடுச்சி. சோத்துக்கு கூட இப்ப வழி இல்லையேடா. என்ன செய்யலாம்? " 

"சாட்டையடி"

"என்னது சாட்டையடிச்சி சம்பாதிக்கவா? உனக்கு என்ன கொழுப்புடா?" என்று அருகில் இருக்கும் குளுக்கோஸ் பாட்டிலை எடுத்து அவன் கபாலத்தில் சொருகுகிறார்.    
................................................................................................................. 


..................................
Posted by:
! சிவகுமார் !
..................................
    

Monday, October 24, 2011

தேவையா பட்டாசு?


பட்டாசில்லா தீப ஒளித்திருநாள் இனி பிறக்கட்டும். வலையுலக நண்பர்கள் அனைவருக்கும் தீபாவளி வாழ்த்துகள்! 











Thursday, September 29, 2011

எங்கள் ஒரிஜினல் காப்பி பேஸ்ட் பதிவு


முன்னாடி எல்லாம் பிரபல பதிவர்கள்தான் பெரிய பெரிய பத்திரிக்கைல இருந்து காப்பி பேஸ்ட் பண்ணுவாங்க. இப்போத்தான் எல்லாம் மாறிப்போச்சே. நேற்று வந்த பதிவரில் இருந்து பழம் தின்று கொட்டை போட்ட பதிவர்கள் வரை காப்பி பேஸ்ட் போடுகிறார்கள். பெரிய பத்திரிக்கைல இருந்து காப்பி பண்ணதெல்லாம் போயி எங்கே என்ன கிடைக்குதோ சத்தமில்லாம அள்ளிட்டு வந்து போட்டுடுறாங்க. அதுக்கு வர்ர கமெண்ட்டுகள பார்க்கனுமே, அதுக்கே தனிக்கட்டுரை எழுதனும். ஆஹா அருமையான பகிர்வு, நல்ல பகிர்வு, உபயோகமான பகிர்வு நண்பா, சூப்பர் பகிர்வு பாஸ்... கேட்கவே அருமையா இருக்கில்ல? (அடிக்க வராதீங்கண்ணே, நாங்க கூட அந்த மாதிரி அப்பாவியா கமெண்ட் போட்டிருக்கோம்....)

சரி அபடியே இந்த ட்ரெண்டை பிக்கப் பண்ணி நாமலும் எதையாவது காப்பி பேஸ்ட் பண்ணலாம்னா எதுவுமே சிக்க மாட்டேங்கிது. ஏது ஏது இப்படியே போனா அப்புறம் காப்பி பேஸ்ட் பண்ணலைன்னு திரட்டிகள்ல இருந்து கூட ஒதுக்கி வெச்சிடுவாங்களோன்னு எல்லாரும் பயமுறுத்துறாங்க. அதுனால விடிய விடிய நின்னுக்கிட்டே யோசிச்சு யோசிச்சு ஒருவழியா முடிவு பண்ணிட்டோம். மனசை திடப்படுத்திக்குங்க. இனி நாங்களும்  காப்பி பேஸ்ட் பதிவு போடப்போறோம். எப்படியும் ஒரு காப்பி பேஸ்ட் பதிவு போட்டே ஆகறதுன்னு களத்துல இறங்கி உங்களுக்காக ஒரு அருமையான காப்பி பேஸ்ட்டை இங்கே போட்டிருக்கோம். 

பாருங்க, புடிக்கலேன்னா சொல்லுங்க, நாளைக்கு வேற காப்பி பேஸ்ட் போடுறோம்.....

.
.
.

.
.
..



காப்பி






பேஸ்ட்


என்ன சார் இந்த காப்பிபேஸ்ட் ஓகேதானேஇத வெச்சிக்கிட்டு எப்படியாவது எங்களுக்கும் ஒரு ரேங் வாங்கிக் கொடுத்துடுங்க சார். அத வெச்சி அண்ணா நகர்ல இல்லேன்னாலும் அமிஞ்சிக்கரைலயாவது ஒரு ஃப்ளாட் வாங்கிடனும்.

நன்றி:  காப்பி பேஸ்ட் பதிவர்கள்கூகிள் இமேஜஸ்...


எங்கள் பதிவை அனுமதி இன்றி காப்பி பேஸ்ட் செய்து பெரும் பொருள் ஈட்டியவர்கள்:  


....................................................................................................................
            

Wednesday, September 28, 2011

காப்பி பேஸ்ட் 24/7



                                                                    


* இன்று சூரியன் மேற்கில் அஸ்தமிக்கும். சில மேகங்கள் வெள்ளையாகவும்  பல மேகங்கள்  சாம்பல் நிறத்திலும் காட்சி அளிக்கும். 

* நாளை வரப்போவது கண்டிப்பாக வியாழக்கிழமையாக இருக்கும்.  

*பெட்ரோல் உயர்விற்கு காரணம் ரஜினியின் கருப்பு நிறமா/கமலின் சிகப்பு நிறமா? தமிழ்நாட்டில் பரபரப்பு.

* இன்று நடக்கும் 20/20 போட்டியின் முடிவு வெற்றி/தோல்வி/டை அல்லது   ஆட்டம் ரத்து என்றிருக்கும்.

* உள்ளாட்சி தேர்தலில் அமெரிக்க ஜனாதிபதி போட்டி இடுவாரா? பீதியில்  பிளிரும் திருச்சி மக்கள். ஒரு நேரடி ரிப்போர்ட்.

* மெட்ரோ ரயில் திட்டத்தால் சென்னையில் இருக்கும் பூங்காக்களுக்கு பேராபத்து. இதுவரை மொத்தம் 1,54,025 புற்கள் சிதைக்கப்பட்டுள்ளன.

* போர்டெல் சூப்பர் சிங்கரில் பாய் பரணுக்கு உங்கள் ஓட்டை பல் விளக்கும்  முன் போட்டு விட்டீர்களா? இல்லையென்றால் கந்துவட்டிக்கு கடன்  வாங்கி ரீசார்ஜ் செய்து உடனே போடுங்கள்.

*எங்கள் பத்திரிகை கட்டுரைகளை முன் அனுமதி பெற்றி உங்கள் பதிவில்  போட உடனே அணுகுங்கள். 99% கட்டண சலுகை. இன்னும் இரண்டு  நாட்களே உள்ளன. 5,000 ரூபாய் கட்டுங்கள். 1,00,000 ஹிட்சை வாங்கி  வெற்றிக்கொடி கட்டுங்கள்.      
    
நன்றி:

பழைய தலைமுறை 
நித்யானந்த விகடன் 
எவள் விகடன் 
டார்க் மஞ்சள் குங்குமம் 
மாதமலர் 
வாரத்தந்தி 
(சூப்பர்) ஸ்டார் விஜய் 
கன் டி.வி. 
'கும்மு'தம்
டைம்ஸ் ஆப் விதி 
டெக்கன் திண்டுக்கல் 
மத்யான முரசு 


இந்தப்பதிவு யார் மனதையும் புண்படுத்துவற்கு அல்ல என்று சொன்னால் நம்பவா போகிறீர்கள். காப்பி பேஸ்ட் பதிவர்களை கௌரவிக்கும் பொருட்டே இப்பதிவு எழுதப்பட்டுள்ளது என்பதை தயவு செய்து உணருங்கள். இதைப்படித்து காப்பி பேஸ்ட் பதிவர்கள் கோபித்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். டென்சன் ஆகாதவர்கள் கமென்ட் போட்டு  தங்கள் கருத்துக்களை சொல்லுங்கள். 




Monday, September 19, 2011

பதிவர் சந்திப்பு – பாகம் இரண்டு


அன்புள்ள வலைப்பூவிற்கு,

எது முதல் பாகம் என்று தெரியாதவர்களும், முதல் பாகத்தை படிக்காதவர்களும் இங்கே போய் படித்துவிட்டு வரவும்.

கண்ணா லட்டு தின்ன ஆசையா...?
பதிவர்களுக்கு ஓர் நற்செய்தி. பதிவர்களின் படைப்புகளை தேர்ந்தெடுத்து வெள்ளிநிலா என்ற மாத இதழில் அச்சிட்டு வெளியிடுகிறார் நம்ம ஷர்புதீன். இந்த மாத இதழ் முற்றிலும் இலவசமாக உங்கள் வீடு தேடிவர, உங்கள் வீட்டு முகவரி, தொலைபேசி எண் (விருப்பமிருந்தால் மட்டும்), பிறந்த தேதி (வாழ்த்து தெரிவிப்பதற்காக) ஆகிய விவரங்களை vellinila@gmail.com என்ற முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பினால் போதும்.

கண்ணா ரெண்டாவது லட்டு தின்ன ஆசையா...?
இதே பாணியில் பதிவர் குடந்தை மணியும் பதிவர்களின் படைப்புகளை அச்சிட்டு மாத இதழாக வெளியிட்டிருக்கிறார். (ஹி... ஹி... அட்டைப்படத்தில் நம்மாளு காஜொள்ளு...). தனி இதழின் விலை ரூ.5 மட்டுமே. சந்தா கட்ட விரும்புபவர்களும் கட்டலாம். இதைப் பற்றிய மேலும் விவரங்கள் தெரிந்துக்கொள்ளவும், சந்தாதாரராகவும், உங்கள் படைப்புகளை பரிந்துரைக்கவும் thambaramanbu@gmail.com என்ற முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பவும்.

பதிவர்களை ஊக்கப்படுத்தும் ஷர்புதீனுக்கும், குடந்தை மணிக்கும் எங்கள் நன்றியும் வாழ்த்துக்களும். இனி பதிவர் சந்திப்பு பாகம் இரண்டு...

வருகை பதிவேட்டில் தன்னுடைய முறை வரும்போது நாலஞ்சு வலைப்பூ இருக்கே எதை எழுதுறதுன்னு கேட்டார் தம்பி கூர்மதியன். யெ”ள”வெனப் புலர்வுகள் எழுதுங்கன்னு சொன்னேன். யோவ் அது “யெள”வெனப் புலர்வுகள் என்று அப்பாவியாய் முகத்தை வைத்துக்கொண்டு அவர் சொன்னதைப் பார்க்க பாவமாகத்தான் இருந்தது. சரி விடுங்க தம்பி, நாங்கல்லாம் “ஒள”வையாரையே ஒ”ள”வையார்ன்னு படிச்சவங்கன்னு அசடு வழிந்தபடி சொல்லி சமாளித்தேன்.

சர்க்கஸ் சிங்கம் தனது வழக்கமான பாணியில் அதிரடியாக பேச ஆரம்பித்தார். தமிழ் சினிமாவிலேயே முதல்முறையாக உண்டியல் குலுக்கி சினிமா எடுக்குறது நாங்களாதான் இருக்கும் என்று ஃபீல் பண்ணார். (அவர் சொன்னது அந்த உண்டியல் குலுக்கல் அல்ல). திருநங்கைகள் தொடர்பாக உருக்கமான சினிமா ஒன்றை இதுவரை தமிழ் சினிமாவில் யாரும் எடுக்காத முறையில் எடுத்துக்கொண்டிருப்பதாக சொன்னார். பட வினியோகத்தை பற்றி இத்தனை நாள் கவலைப்பட்டுக் கொண்டிருந்தேன். இப்பதான் இருக்கவே இருக்காரே கேபிள் சங்கர் அப்படின்னு பத்த வச்சிட்டு படக்குன்னு சீட்ல போய் உட்காந்துட்டார்.

லக்கிலுக் யுவகிருஷ்ணா புதிய பதிவர்களுக்கு சில டிப்ஸ் தந்தார். தலைப்புக்கள் ரத்தினச்சுருக்கமாக, முடிந்தவரைக்கும் ஒரே வார்த்தையில் இருக்க வேண்டுமென்று குறிப்பிட்டார். மேலும், சில பதிவர்கள் நாராசமாக தலைப்பு வைப்பதாக சொன்ன அவர், ஒரு நம்பர் ஒன் பதிவரின் தலைப்பை சொல்லி கலாய்க்கவும் செய்தார். (இந்த பிட்டு போதுமா...?) இடுகையின் அளவு இருநூற்று ஐம்பது வார்த்தைகளிலிருந்து ஐநூறு வார்த்தைக்களுக்குள் இருந்தால் மட்டுமே நிறைய பேர் படிப்பார்கள். இல்லையென்றால் ஸ்க்ரோல் பட்டன்தான் என்று உண்மையை போட்டு உடைத்தார்.

இதேபோல, பதிவுலகத்தின் தீவிர வாசகர் என்று அறியப்படும் வரதராஜன் சாரும் பதிவர்களுக்கு சில டிப்ஸ் கொடுத்தார். கலவை பதிவுகள் எழுதும் போது சீரியஸான விஷயங்களையும், நகைச்சுவையான விஷயங்களையும் ஒரே இடுகையில் எழுதுவது ஒத்துப்போகவில்லை என்று சொன்னார். மேலும் கேபிள் மாதிரி எளுத்தாளர் ஆகணும்ன்னு லட்சியம் இருக்குறவங்க எந்த வலைப்பூவை படித்தாலும் அதிலுள்ள அருமையான சொல்லாடல்களை நோட்ஸ் எடுத்துக்கொள்ள வேண்டும் என்று குறிப்பிட்டார்.

சதீஷ் – மாஸ் சூர்யவம்சம் சரத்குமார் மாதிரி வார்த்தைக்கு வார்த்தை ஜாக்கியை புகழ்ந்து பேசியதைப் பற்றி கடந்த இடுகையிலேயே குறிப்பிட்டிருந்தேன். அதுபோக, பேச்சு வாக்கில் அநேகமாக இங்கே வந்திருப்பவர்களில் நான்தான் ரொம்ப சின்ன பையன். எனக்கு இருபது வயசுதான்னு ஒரு அறிக்கை விட்டார். (இந்தமாதிரி எல்லாம் ஸ்டேட்மென்ட் விட்டா பதிவுலக நாட்டாமைங்க கும்மிடுவாங்க தம்பி. பாதிக்கப்பட்டவன் சொல்றேன் கேட்டுக்கோ). உடனே கூட்டத்தில் இருந்து எனக்கு பதினெட்டு வயசுதான்னு ஒரு குரல் வர சதீஷ் பல்ப் வாங்கினார்.

ஸோ, வந்திருந்தவர்களில் செம யூத் பதிவர் யார்...?
நாஸ்தென்கா (???) என்ற பெயரில் வலைப்பூ நடத்தி வரும் ரதியழகன் (ஒரிஜினல் பெயர் பார்த்திபன்) தான் அந்த பதினெட்டு வயது குரல். கணினி, இணையம் இல்லாத காரணத்தினால் அதிகம் எழுத முடியாமல் எப்பொழுதாவது பிரவுசிங் சென்டருக்கு போய் பதிவெழுதும் ரதியழகனை பாராட்டியே ஆகவேண்டும். மிகப்பெரிய எழுத்தாளராக வரவேண்டும் என்ற அவரது எண்ணம் ஈடேற வாழ்த்துவோம்.

யார் இந்த மங்குனி அமைச்சர்...?
உள்ளே நுழைந்த ஒவ்வொருவரையும் நான் எனது சுய அறிமுகத்தோடு வரவேற்றுக் கொண்டிருந்தேன். ஒருவர் மட்டும் கொஞ்சம் முறைப்பாகவும், விறைப்பாகவும் வந்தார். சரி ஒருவேளை எலக்கியவாதியா இருக்கும்ன்னு நினைச்சு ஒதுங்கிட்டேன். அறிமுகப்படலத்தின் போதும் அமைதியாகவே அமர்ந்திருந்த அவரை கேபிள் வாங்க வாங்கன்னு வலியுறுத்தி அழைத்ததும் சாமி... எலக்கியவாதியேதான்னு முடிவு பண்ணிக்கிட்டேன். முன்னே போய் நின்னவர் பொசுக்குன்னு நான் மங்குனி அமைச்சர்ன்னு ப்ளாக் வச்சிருக்கேன்னு சொல்லிட்டார். கூட்டத்தில் ஒரு பரபரப்பு, ஒரு சலசலப்பு. மறுபடியும் வந்து அமர்ந்தவரிடம் பேசலாம் என்று நினைத்தேன். ஆனால் அவர் டீ கொண்டு வந்த பையனை மடக்கி நீ ஒரு பிரபல பதிவரா என்று கலாய்த்துக்கொண்டிருந்தார். ஆள விடுங்கடா சாமின்னு ஓடி வந்துட்டேன்.

பதிவர் சந்திப்பு முடிந்ததும் ஒயின்ஷாப்புக்கு போன மூன்று பிராப்ள பதிவர்கள் யார்...?

அங்கே நடந்தது என்ன...?

யார் டவுசரை யாரு கிழிச்சது...?

அன்னை சோனியா...? அஜீத் – விஜய்...?

இதுபோன்ற கேள்விகளுக்கு விடை தாங்கிய இடுகை எனது வலைப்பூவில் இன்னும் சில தினங்களில்...

ஆக, பதிவர் சந்திப்பில் வெறும் கூத்தும் கும்மாளமும் தான் நடந்ததா என்று கேட்பவர்களுக்கு, பதிவர் சந்திப்பில் நடந்த சீரியஸ் விஷயங்களைப் பற்றி “சீரிய” பதிவர் சிவகுமார் எழுதுவார்.

என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN

Tuesday, September 13, 2011

பதிவர் சந்திப்பு – வருகை பதிவேடு


அன்புள்ள வலைப்பூவிற்கு,

எங்கே...? எங்கே...? என்று எல்லோரும் ஆவலுடன் எதிர்பார்த்துக்கொண்டிருந்த பதிவர் சந்திப்பு குறித்த இடுகை இதோ உங்களுக்காக...

நம்ம ஊர் மாநகர பேருந்துகளின் மீதுகொண்ட அவநம்பிக்கையால் கொஞ்சம் முன்கூட்டியே வீட்டில் இருந்து கிளம்பி முதல் ஆளாக டிஸ்கவரி புக் பேலஸுக்கு சென்றிருந்தேன். அங்கே எனக்கு முன்னால் யாரும் வந்திருக்கவில்லை. ஆக, மீ த ஃபர்ஸ்ட், வடை, போண்டா, பஜ்ஜி எல்லாம் எனக்குத்தான்.

வேறு வழியில்லாமல் சீக்கிரமாக வந்திருந்த அஞ்சாசிங்கம், இன்னும் யாரும் வரவில்லை என்று சொன்னதும் உடன் வந்திருந்த நண்பருடன் ஒயின்ஷாப்புக்கு ஜூட்.

சிவகுமாருக்கு போன் செய்து எங்கே இருக்கீங்கன்னு கேட்க அவர் கே.கே.நகர் பஸ் ஸ்டாப்பில் இருக்கேன் என்று சொன்னார். யோவ்... நானும் கே.கே.நகர் பஸ் ஸ்டாப்பில் தான் இருக்கிறேன் என்று சொல்லிக்கொண்டே திரும்பிப்பார்த்தால் சிவா “தலைவர்” கவுண்டமணி படம் போட்ட பேனருடன் பவர் ஸ்டாராக நின்றுக்கொண்டிருந்தார்.

அஞ்சாசிங்கமும் அவரது நண்பரும் ஒரு மார்க்கமாக திரும்பி வர டீக்கடையில் ஒரு மினி பதிவர் சந்திப்பு ஆரம்பமானது. அப்போது நீங்க எல்லாம் பிளாக்கர்ஸா என்றபடி என்ட்ரி கொடுத்தார் பாண்டிச்சேரியில் இருந்து வெறும் கையுடன் வந்து ஏமாற்றமளித்த கோகுல்.

சிறிது நேரத்தில் “டிஸ்கவரி புக் பேலஸ்” வேடியப்பன் வர, நாங்கள் அவரை பின்தொடர்ந்தோம். இதற்கு முந்தய தலைமுறை பதிவர்கள் எனக்கு அமோக ஆதரவு தந்தார்கள். இப்போது அடுத்த தலைமுறை பதிவர்கள் வந்திருக்கிறீர்கள் உங்களுடைய ஆதரவும் எனக்கு தேவை என்று அநியாயத்திற்கு எஸ்.ஏ.ராஜ்குமார் மியூசிக் போட்டார்.

பதிவர் சந்திப்பு வழக்கமாக நடக்கும் முதல் மாடியில் அல்லாமல் இரண்டாவது மாடியில் அமைந்திருந்தது ஏமாற்றமாக இருந்தது அந்த அறையை பார்க்கும் வரை. அந்த அளவிற்கு நமக்காகவே வடிவமைத்தது போலிருந்த அந்த அறையை நமக்கு தந்து உதவிய “டிஸ்கவரி புக் பேலஸ்” வேடியப்பன் அவர்களுக்கும், “நடிப்பு பட்டறை” உரிமையாளருக்கும் மனமார்ந்த நன்றிகள்.

உள்ளே சென்று விழா “அரங்கத்தினை” ஏற்பாடு செய்துக்கொண்டிருக்க ஒவ்வொரு பதிவர்களாக வரத்தொடங்கினர். வந்திருந்தவர்கள் ஆர்டர் முன்னே பின்னே இருக்கும் மன்னிச்சூ...

ஏதோ எனக்கும் இதற்கும் சம்பந்தமில்லை என்பதுபோல் வந்து அமைதியாக அமர்ந்திருந்தார் பழம்பெரும் பதிவர் அண்ணாமலை சுவாமி. அரங்கிற்குள் முறைப்படி முதல் வருகை தந்தவர் அவரே.

பதிவர்களின் படைப்புகளை இதழாகவும் மலராகவும் வெளியிட்டு பதிவர்களை ஊக்கப்படுத்தி வரும் ஷர்புதீனும், குடந்தை அன்புமணியும் அவரவர் இதழ்களை வந்திருந்தவர்களிடம் விநியோகித்தபடி இருந்தனர். (இது பற்றிய விவரம் அடுத்த பாகத்தில்...)

தம்பி கூர்மதியன் உள்ளே நுழையும்போதே பெண் பதிவர் ஒருவருடன் போன் பேசியபடியே வந்தார். போனை வைங்க பாஸ்ன்னு எவ்ளோ சொல்லியும் கேட்கலை. (பொறாமை... லைட்டா...?)

தமிழ்மணத்தை கலக்கிக்கொண்டிருக்கும் பதிவுலக இரட்டைக்குழல் துப்பாக்கி கவிதை வீதி செளந்தரும், வேடந்தாங்கல் கருனும் ஜோடியாக உள்ளே வர, அதிஷா – லக்கிக்கு அப்புறம் சக்சஸ்ஃபுல் பதிவுலக ஜோடி நீங்கதான்னு ஷர்புதீன் கொளுத்திப்போட்டார்.

பதிவர் சந்திப்பிற்காக மதுரையிலிருந்து வந்திருந்த அஞ்சாநெஞ்சன் மணி கையில் “பதிவர் தென்றல்” புத்தகத்தை கொடுத்ததும் அட்டைப்படத்தில் இருக்கும் காஜலை பார்த்து லிட்டர் கணக்கில் ஜொள்ளு விட்டபடி வேறொரு உலகத்திற்கு சென்றுக்கொண்டிருந்தார்.

மனதளவில் நானும் யூத்துதான் என்று தலைமுடிக்கு டை அடிக்காமல் சால்ட் அண்ட் பெப்பர் லுக்கோடு “மங்காத்தா” அஜீத் மாதிரி அதிரடியாக வருகை தந்தார் சென்னை பித்தன்.

சிறிது நேரத்தில் ஜாக்கியின் சிஷ்யகேடி... ச்சே... சிஷ்யகோடி சதீஷ் மாஸ் (மாஸ் என்ற வார்த்தை எங்கேயும் மிஸ் ஆகக்கூடாதென்று பலமுறை கேட்டுக்கொண்டார்) உள்ளே வந்து ஓரமாக அமர்ந்துக்கொண்டார். உங்க தலைவரு ஜாக்கி வாராரு... பக்கத்துல ஒரு சீட் போட்டு வைங்கப்புன்னு சொன்னதும் அந்த முகத்தில் ஃபேர் அன்ட் லவ்லி போடாமலே ஒரு பொலிவு பிறந்தது.

முதல் ஆளாக வரவேண்டிய கே.ஆர்.பி செந்திலும், கேபிளும் சாவகாசமாக வந்து சேர்ந்தனர். (இவ்வளவு வயசாகியும் பொறுப்பு இல்ல). வந்ததிலிருந்தே “நானும் ரவுடிதான்” வடிவேலு மாதிரி “நானும் யூத்துதான்... நானும் யூத்துதான்...” என்று கேபிள் நடுஅரங்கில் நடனமாடிக்கொண்டிருந்தார்.

தெருவுக்கு தெரு “யூத்” பதிவர் சந்திப்பு என்று விளம்பரப்படுத்தியதில் (வயதில்) மூத்த பதிவர்கள் நான் வரலைப்பா என்று பின்வாங்க ஆரம்பித்தார்கள். எனவே ஃபேஸ்புக்கில் “புதிய தலைமுறை” பதிவர்கள் சந்திப்பு என்று விளம்பரப்படுத்தினேன். அதைப் பார்த்து புதிய தலைமுறை பத்திரிகை / தொலைக்காட்சி சம்பந்தப்பட்ட நிகழ்ச்சி என்று நினைத்து வந்திருந்தார் மலர் விழி மேடம். அசடு வழிந்தபடி அவரையும் வரவேற்று அமர்த்தினோம்.

பதிவுலக சுஜாதா லக்கிலுக் யுவகிருஷ்ணா அதிஷா இல்லாமல் தனியாக வந்திருந்தது ஏழு அதிசயங்களில் ஒன்றாகத்தான் இருந்திருக்கும். (அவருடைய வலைப்பூவில் சுட்ட வரிகள்). பதிவர் கும்மி சார்பாக சில சீரியஸான விஷயங்கள் பற்றி பேசவும் விளக்கவும் உருப்புடாதது நரேன் வந்திருந்தார். அவர் பேசிய சீரியஸ் விஷயங்கள் – அடுத்த பாகத்தில்...

முதல் மாடியில் துணை இயக்குனர்கள் கருத்தரங்கமும், இரண்டாவது மாடியில் பதிவர் சந்திப்பும் நடைப்பெற்றதால் சர்க்கஸ் சிங்கம் இங்குமங்கும் தாவிக்கொண்டிருந்தார்.

அறிமுகப்படலம் விறுவிறுப்பாக நடந்துக்கொண்டிருக்க, திடீரென மொத்தக்கூட்டமும் ஒரு திசையை நோக்கி திரும்ப, அங்கே பாட்ஷா ரஜினிகாந்த் மாதிரி பின்னாடி நான்கு பேரோடு ஜாக்கி சேகர் வந்துக்கொண்டிருந்தார். அவர் பத்தாம் வகுப்பில் 277/500 மார்க் மட்டுமே வாங்கியதால் அவருக்கு கடைசி வரிசை ஒதுக்கப்பட்டது.

“வலைமனை” சுகுமார், ரோமியோ, பலே பிரபு, ஜில்தண்ணி யோகேஷ், அதிஷா, டான் அஷோக், சிரிப்பு போலீஸ் ரமேஷ் உட்பட பலர் நிகழ்ச்சிக்கு கட்டாயம் வருவதாக சொல்லிவிட்டு எஸ்கேப் ஆகிவிட்டனர்.

இதில் “வலைமனை” சுகுமார் தந்த ஏமாற்றம் பெரியது. வழக்கமாக பதிவர் சந்திப்பு என்றால் சுகுமார் கேமராவுடன் வந்து “கோ” பட ஹீரோ ஜீவா மாதிரி போட்டோவா எடுத்துத்தள்ளுவார். அதனால்தான் சிவா ஒவ்வொரு முறை போட்டோ எடுப்பது பற்றி கேட்டபோதும் சுகுமார் வருவார் கவலைப்படாதீங்க என்று நெஞ்சை நிமிர்த்திச் சொன்னேன். ப்ச் போங்க சுகுமார்...!

ஆனால், இதோ நான் கொண்டுவந்திருக்கிறேன் என்று தனது டிஜிட்டல் கேமராவால் போட்டோக்களை சுட்டுக்கொண்டிருந்தார் “ரெட்ஹில்ஸ்” பாலா. சுகுமார் அளவுக்கு டெடிகேஷன் இல்லையென்றாலும் அவர் கேமரா கொண்டுவராமல் இருந்திருந்தால் இந்த பதிவர் சந்திப்பு வரலாற்றில் பதியப்படாமல் போயிருக்கலாம்.

அதே போல மங்குனி அமைச்சர், ஒளிப்பதிவாளர் விஜய் ஆர்ம்ஸ்ட்ராங் உட்பட சிலர் எதிர்பாராத விதம் வருகை தந்து நமக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்தார்கள்.

கிட்டத்தட்ட நிகழ்ச்சி முடியும் தருவாயில் சுரேகா சுந்தர் கூலிங் கிளாஸ் சகிதம் உள்ளே நுழைந்தார். அவர் தாமதமாக வந்த காரணத்தினால் அவரது ஆஸ்தான அறிவிப்பாளர் பணியை கே.ஆர்.பியும் கேபிளும் பகிர்ந்துக்கொண்டார்கள்.

வாசகர் வட்டம் சார்பாக வரதராஜன், செல்வினின் நண்பர் சதீஷ், சிவகுமாரின் நண்பர் ராம் குமார், வேடியப்பனின் விருந்தினர் டாக்டர் மணியன், சாம்ராஜ்ய ப்ரியன், பாண்டி ஆகியோர் வந்திருந்தனர்.

இவர்கள் தவிர பதிவர்கள் எல்.கே., மயில் ராவணன், ந.ர.செ.ராஜ்குமார், ரதியழகன், வில்லன், ஸ்டாலின் ஃபெலிக்ஸ், பிரதீப் குமார், வே.ராமசாமி, யுவபாரதி, பரமேஸ்வரி, லக்ஷ்மி நாராயணன், அப்புறம் பதிவர் சங்க சட்ட ஆலோசகர் சாமித்துரை, த.மு.எ.க.ச சார்பாக மா.பசுபதி உட்பட மொத்தம் 43 பேர் வருகை தந்திருந்தனர்.

யார் இந்த மங்குனி அமைச்சர்...?

வந்திருந்தவர்களில் செம யூத் பதிவர் யார்...?

உருப்புடாத நரேன் பேசிய உருப்படியான விஷயம் என்ன...?

இதுபோன்ற கேள்விகளுக்கான விடை அடுத்த பாகத்தில்... காத்திருங்கள்...

போட்டோஸ்...??? எடுத்ததே பத்து, பதினைந்து போட்டோஸ் தான். இதுல வேற ஆளாளுக்கு என் போட்டோவை போட்டுடாதீங்க, அய்யய்யோ என்னுது மட்டும் வேணாம்ன்னு அளப்பறையை கொடுத்தா என்ன பண்றது...?

டிஸ்கி: இதை பல பாகங்களாக எழுதி உங்களை சாகடிப்பதோ, நோகடிப்பதோ எங்கள் நோக்கமல்ல. ஒரே பாகமாக வெளியிட்டால் உண்மைத்தமிழன் பதிவு சைஸை தாண்டிவிடும். (இப்பவே கிட்டத்தட்ட அப்படித்தான்...)

என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN