Sunday, June 30, 2013

நாங்களும் எழுதுவமில்ல காதல் (கவுஜ)கடிதம்...!

டிஸ்கி : திடங்கொண்டு போராடு சீனு ஒரு காதல் கடிதம் எழுதும் போட்டி நடத்துவது நமது பதிவர்கள் அனைவருக்கும் தெரியும். அந்த போட்டியில் நமது தீவிர இலக்கியவாதியும், நற்சிந்தனையாளரும்!?, எங்கள் அண்ணன் நக்கீரன் கலந்து கொண்டிருக்கின்றார். அவர் தன்னுடைய பால்ய கால காதலியான அருக்காணிக்கு ஒரு அழகான காதல் (கவிஜ) கடிதம் வரைந்து அனுப்பியிருக்கின்றார்....அதை கவுண்டமணி செந்தில் தளத்தில்தான் பதிவிட வேண்டும் என்று ஒற்றைக்காலில் சற்று தள்ளாடியபடி வேண்டிக் கொண்டார்.



அன்பே எங்கக்கா மவளே அருக்காணி
உங்கப்பன் ஒரு மொள்ளமாரி
உன் வூட்டுப் பக்கம் நான் வந்தாலே
பேசுறான் வசைமாரி
அதனால நான் மொட்டை மாடியில
படுத்துகினு யோசிச்சேன்
இதோ எழுதினேன் ஒரு கடுதாசி...!

என் ஊரு சிதம்பரம்
உன் பக்கத்து வூட்டுக்காரன் ஏகாம்பரம்
அவனுக்கு வாங்கித்தந்தேன் பலாப்பழம்
அவன்கிட்ட கொடுத்து வுட்டேன் காதல் கடிதம்
அந்த நாதாரி புல் மப்புல மட்டையானான் டிச்சு ஓரம்......!

குளிருக்கு ஆவாது மெக்டோவலு
காதலுக்கு ஆவாது அல்லக்கையி
அதனால நானே நல்ல கடிதம் எழுதி
கொண்டு வரேன் நாளான்னிக்கி....!

உன் மஞ்சா கலரு தாவணி
ஒண்ணே முக்காலு ரூவா பாண்ட்ஸ் பவுடரு....!
வானத்தைப் பாக்கும் உன் கூந்தலு
எம் மனசு நீ வந்துகினு உக்காரும் ஸ்டூலு
அமலா பாலு, திரிசா எல்லாருக்குமே நீ ஒரு ஸ்கூலு!

நான் குடிக்கும் கிங் பிசரு பீரு நீதாண்டி
நான் வெச்சிருக்கிற நோக்கியா போனு நீதாண்டி
என்னோட லேப்டாப்பும் நீதாண்டி....
என்னோட கமெண்ட் பாக்சும் நீதாண்டி
நான் எழுதும் பிளாக்கும் நீதாண்டி
என் காதலுக்கு நீ தாடி சம்மதம்
இல்லையின்னா நான் டிராப்டில் இருக்கும் ஒலக எலக்கியம்....!

அன்புடன்


”கவிக்கோ”பால் பல்பொடி (எங்களுக்கு வேறு எங்கும் கிளைகள் கிடையாது) ”முனைவர் நக்கீரர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்!”

---------------------------------------------------------------------------------------------

சீனுவின் போட்டி தொடர்பான பதிவு : http://www.seenuguru.com/2013/06/contest-updates.html

Tuesday, June 18, 2013

லிங்கூ - கவுண்டர் அட்டாக்

                                                                         


கடந்த சில நாட்களாக தமிழ் பேசும் நல்லுலகில் நமது வயிற்றை கலக்கி வருவது இயக்குனர் லிங்குசாமியின் 'லிங்கூ' கவிதை தொகுப்பு. நேற்று அன்னாரது படைப்பை வாசிக்கும் பாக்கியம் பெற்றேன்(நன்றி டிஸ்கவரி புக் பேலஸ் வேடியப்பன் அவர்கள்). அதிகபட்சம் பத்து வார்த்தைகள் கொண்ட சாம்பிள்(!) ஹைக்கூகள் ஒரு பக்கத்திற்கு. விலை 90 ரூபாயாம். வாழ்க கும்கி. இதில் இடம்பெற்ற லிங்கூக்களை  கவுண்டர் மற்றும் செந்தில்  வாசித்து இருந்தால்....!!

டிங்கு(செந்தில்): வாங்கம்மா வாங்க. தென்னைய வச்சா எளநீரு. புள்ளைய பெத்தா கண்ணீரு.   

தல(கவுண்டர்):  ஆமாம்மா. அடுப்புல வச்சா தண்ணீரு. எறக்கி வச்சா வெண்ணீரு. படுவா ரைமிங்கா? 

டிங்கு: ஹலோ...ரொம்ப பேசாதீங்க. 'டிங்கூ'ங்கற தலைப்புல ஹைக்கூ எழுதி லிங்கு அண்ணன் மாதிரி கவிஞனா மாறப்போறேன்.

தல: அது சரி. நீ ஒருத்தன்தான் பாக்கி. ஒன்ன மாதிரி ஓட்ட காலணா எல்லாம் இப்படி ஆகுற அளவுக்கு நம்ம திருப்பதி பிரதர் என்னதான் எழுதி இருக்காரு? எங்க கொஞ்சம் அவுத்து விடு.

டிங்கு: படிக்கறேன் கேட்டுக்கங்க. 

'சுஜாதா, கவிதா, பத்மா, உஷா அப்பறம் கீதா 
இவை எல்லாம் பெயர்கள் அல்ல'.

தல: அப்பறம்..

டிங்கு: அவ்வளவுதான்.

தல: அடங்கோ? சௌபாக்யாவை விட்டுட்டாரே. இவை எல்லாம் பெயர்கள் அல்ல. அன்றாடம் நான் வீட்டு வேலை செய்யும் மிஷின்கள்னு முடிச்சி இருக்கலாம். நெக்ஸ்டு...       
  
டிங்கு:  
              'தேவை இல்லாமல் குழப்பம் விளைவிக்கிறாய்.
              எல்லா திருமண வீடுகளிலும்'

தல: பின்ன..ஊர்ல கல்யாணம்னா, மார்ல மைசூர் சான்டலை தடவிக்கிட்டு 3 தரம் பந்தில உக்காந்து தொந்திய ரொப்பி இருப்பாரு. சும்மா விடுவாங்களா?


டிங்கு: 'இந்த இடி சத்தத்திற்கு அவளும் பயந்திருப்பாளோ'

தல: யம்ம யம்மா!! பொண்ணோட அப்பன் அருவா சைசுல மீச வச்சிருக்கறத பாத்து பத்து பர்லாங் ஜம்ப் பண்ணி ஓடி வந்துருக்கு நம்ம மாப்பி. இன்னும் பயம் தெளியல போல. அடுத்து....

டிங்கு:     
                    'இஸ்திரி போடும் தொழிலாளியின் வயிற்றில் சுருக்கம்'

தல: அன்னைக்கி அம்மா மெஸ் லீவா இருந்துருக்கும்.     

டிங்கு:
                  'நீ ஊரில் இல்லை. அது தெரியாமல் திருவிழா கொண்டாடுகிறார்கள்'.



தல: தெரிஞ்சிதான் நிம்மதியா கொண்டாடி இருக்காங்க. ஊருக்கே சமைக்கிற சோத்தையெல்லாம் வர்ஷா வர்ஷம் சட்டி சட்டியா நீயே காலி பண்ணி இருக்க . இப்ப நீ ஊர்ல இல்ல. அதான் அந்த சந்தோஷம்.

டிங்கு:     

                 'என்னிடம் கேட்காமல் கடந்து செல்கிறான் பிச்சைக்காரன்'

தல:  'பின்ன. போன தடவ நீ போட்ட தேஞ்சிப்போன அஞ்சி பைசா அவன் கண்ணு முன்னால வந்து போகுமா இல்லையா...

டிங்கு:

                    'ஞாபத்திற்கு வராத எல்லா பெயர்களும் நல்ல பெயர்கள்தான்'.

தல: ஜீ, பீமாவையும் சேத்துதான?

டிங்கு:      
                          'இன்னும் கொஞ்சம் நேரம் கண்களை மூடி வேண்டக்கூடாதா'

தல: கவலைப்படாத. இது கல்யாணி கவரிங் தான்.

டிங்கு:
                      'மொட்டை பனை மரத்தில் தோகை விரித்தபடி மயில்'

தல: அட. ஹிந்தில வேற எழுதி இருக்காரே.

டிங்கு: என்னண்ணே சொல்றீங்க?

தல: ஆமான்டா. தோ கை. அதாவது ரெண்டு கைய பப்பரப்பென்னு விரிச்சிக்கிட்டு மயில் பன மரத்து உச்சில நிக்குது.  வாட் எ விஷுவல் மிராக்கிள். 

டிங்கு: நீங்களும் இருக்கீங்களே? ஒரு ஹிந்தி ஹிக்கூ எழுதி இருக்கீங்களா?

தல: ஏன் இல்ல. கேட்டுக்க..

ஏக் விஸ்வநாதன்
தோ விஸ்வநாதன்
தீன்  விஸ்வநாதன்     

ஏக் தோ தீன் விஸ்வநாதன்.


டிங்கு: லிங்கு பிரதர் மாதிரி என்னோட டிங்கூல ஓவியம் கூட நானே வரைஞ்சி இருக்கேண்ணே.




தல: எது இதுவா? நீ செய்யி ராசா. துணிக்கடைல சமோசா, பஜ்ஜி விக்கறான். கார் வாங்குனா கத்தரிக்கா இலவசம்னு தர்றான். இப்படி சம்மந்தமே இல்லாம ஆளாளுக்கு அலப்பர தர்ரப்ப இது ஒன்னும் தப்பு இல்ல. ஆனா ஒன்னு மகனே. அங்க இருக்குற 500 அண்டா குண்டா எல்லாத்தையும் கழுவிட்டு அப்பறம் வேற என்ன வேணா செஞ்சிக்க.    

(போற போக்க பாத்தா இவன் நம்மள விட பெரியாளு ஆகிடுவானோ. அதுக்கு முன்ன நம்ம ஒரு புக்க போட்ற  வேண்டியதுதான். மொத கவித என்ன எழுதலாம்....)

                                          'ஒரு முறை உள்ளம் இளகாயோ
                                          இல்லாக்காட்டி நான் கடிக்க போவது     
                                           101 பச்சை மிளகாயோ?'

.....................................................................

posted by:
!சிவகுமார்!
  

Monday, June 10, 2013

மாமி சுட்ட பணியாரம் - சிக்கும் வில்லங்க பதிவர்


பிரபல வம்பு வளர்க்கும் பதிவர் ஒருவருக்கு பணியாரம் மிகவும் பிடிக்குமாம். அதனை காரணமாக வைத்து ஏரியாவில் பிரமாதமாக பணியாரம் சுட்டுக் கொடுத்த மாமியை வளைத்து விட்டதாக கேள்வி


அவர் யார் என்றும், அந்த கதை என்ன என்றும் நமது புலனாய்வு குழு விசாரித்துக் கொண்டு இருக்கிறது. விரைவில் முழு ஆதாரத்துடன் பணியாரத்தில் வீழ்ந்த பதிவரின் கதை தொடராக வெளிவரும்.

பதிவுலக பாக்யராஜ்... எப்போதும் மாமிகள் புடை சூழ இருக்கும் பதிவர் , எங்கு சென்றாலும் ஆண்களைவிட பெண்களிடமே அதிகம் பாசத்தை பொழியும் பதிவர் ... வெகுளி போல் நடித்து கொண்டிருக்கும் விஷமக்கார பதிவர் .. கொஞ்ச நாளாக ஒயின் மட்டும் குடித்து வந்தவர் திடீரென ஹாட்டுக்கு மாறி பொளந்து கட்டுபவர்.. என தனக்குள் ஏகப்பட்ட விஷயங்களை ஒளித்து வைத்திருக்கும் திறமைசாலி அவர்.

அந்த பணியார பதிவர் வந்து சரண்டராகி விட்டால் விஷயம் இத்துடன் அமுக்கப்படும். இல்லையென்றால் இந்த மாத ஹாட் நியுஸ் அவர் தான்.

Tuesday, June 4, 2013

ஐயய்யோ நான் எழுத்தாளனுங்கோ




நாட்டாமை வீட்டு நாயின் முதல் பிறந்த நாளுக்காக எட்டுப்பட்டி முழுக்க காலை முதல் ப்ளெக்ஸ் பேனர் ஒட்டிய களைப்பில்  கவுண்டரும், செந்திலும் மதிய நேரம் தெருவோரம் நடந்து செல்கிறார்கள்.  
                                                                     
                                                                 
       
கவுண்டர்(தல): "ஏண்டா டாப் ரேமன் நூடுல்ஸ் தலையா.. நமக்கு இந்த பொழப்பு தேவையா? 'சிங்கத்தின் வீட்டை காவல் காக்கும் தங்கமே', 'ன்னு வித விதமா அந்த நாய்க்கு பேனர் எழுத சொல்றானுங்க பிக்காலி பசங்க. தாங்கல. ஆமா அங்க என்னடா அவ்ளோ பெரிய க்யூ நிக்குது? 

செந்தில்: நம்மூர்ல சிறந்த எழுத்தாளரை தேர்ந்து எடுத்து பத்து TVS கீபோர்ட் பரிசா தர்றாங்கண்ணே..

தல: அடங்கோ. இந்த ஊர்ல நாந்தான பெரிய டமுக்கு டப்பா ரைட்டரு. அப்ப அவார்ட் எனக்குதான். இருடா போயிட்டு வர்றேன்.

செந்தில்: ஆமா வாங்க. போயிட்டு வந்துருவோம்.

தல: என்ன பொந்துருவோம்? கம்முன்னாட்டி... நீ எதுக்கு வர்ற?

செந்தில்: ஜெயில்ல இருந்தப்ப 'கம்பிகளுக்கு பின்னால் ஒரு கானக்குயில்' புத்தகம் எழுதி இருக்கனே....

தல: அடேய் புளிச்ச கீரை. அந்த புக்குக்கு நான் ஒரு நல்ல தலைப்பு சொல்றேன். கேட்டுக்க.. 'கம்பிகளுக்கு நடுவில் ஒரு கருங்குரங்கு'. 

சோகத்தில் செந்தில் விசும்ப... 

தல: ரொம்ப நடிக்காத படுவா. வந்து தொல.

செந்தில்: இந்த விருதுக்கு ஏண்ணே இத்தன பேர் க்யூவுல நிக்கறாங்க?

தல: நம்ம நாட்ல க்யூவுக்கு என்ன பஞ்சமாடா? இலவசத்துக்கு நிப்பாங்க,நடு ராத்திரி கெளம்பி IPL பாக்க ஸ்டேடியம் வாசல்ல நிப்பாங்க, நாளைக்கே ஒரு நல்ல ரைட்டர் டிக்கட் வாங்குனா அந்த சந்தோசத்துல அவன பொதைக்கறதுக்கு கூட க்யூவுல நிப்பாங்க.

இருவரும் க்யூவின் குறுக்கே நுழைய அல்லக்கை இணைய எழுத்தாளர் கொந்தளிக்கிறார்...

"ரெண்டு வருஷமா பிரபல இலக்கியவாதிகளுக்கு எவர்(கிரீன்)  சில்வர் சொம்பு அடிச்சி நெட்ல திரியிற நாங்களே க்யூவுல நிக்கறோம். பின்னால போங்கய்யா"

செந்தில் : ச்சே... நமக்கு இப்படி ஒரு disco appointment வரும்னு எதிர்பாக்கவே இல்லண்ணே.

தல: அட அமுல் டப்பா. அதுக்கு பேரு disappointment டா. டேய்..காலைல இருந்து ஒண்ணுமே சாப்டல. வாடா அம்மா மெஸ்ல தயிர் சாதமாவது சாப்டுட்டு வரலாம்.

செந்தில்:  இப்படி பசிய பாத்தா பட்டம் வாங்க முடியாது. பேசாம வாங்க.

தல: அது சரி..ஆமா இந்த ஊர்ல நம்மள மிஞ்சி ரைட்டர் யாருனா இருக்காங்களாடா?

செந்தில்: என்னண்ணே இப்படி பேசிப்புட்டீங்க. கன்னத்துல போடுங்க.

அருகில் இருக்கும் அதிரடி ரைட்டர் கன்னத்தில் சப்பு சப்பென வைக்கிறார் தல.

செந்தில்: ஐயய்யோ. அவர ஏண்ணே அறஞ்சீங்க...

தல: நீதான்டா கன்னத்துல போட சொன்ன? அது கெடக்குது டோன்ட் ஒர்ரி. ஆமா ஐயா பேரு என்ன?

செந்தில்: இதுக்குத்தான் அடிக்கடி டி.வி.பாக்கணும். ஐயா பேரு அமானுஷ்ய புத்திரன். மைசூர் போண்டால ஏன் மைசூர் இல்லைங்கிற பிரச்னைல இருந்து ப்ரித்வி ஏவுகணையை பிசிறு இல்லாம பத்த வக்கிறது எப்டிங்கறது வரை இவருக்கு அத்துப்படி.

தல: பார்ரா!!! நான் கூட ஒரே ஒரு நாள் இவர டி.வி.ல பாத்து இருக்கண்டா...போன வாரம் 16 மணிநேரம் பவர் கட் வந்தப்ப கூட டி.வி.ல வந்து 'BCCI தலைவர் ஜக்மோகன் டால்மியா ரிசைன் பண்ணியே ஆகணும்'னு சண்ட போட்டுட்டு இருந்தாருப்பா. அதுல என்ன கொடுமன்னா இவரு பேச ஆரம்பிச்சதுமே எதிர்ல இருந்தவங்க எல்லாம் ஸ்டுடியோவை விட்டு ஓடிட்டாங்க. 

ஆனாலும் நம்மாளு அசரலையே. கேமராமேன், லைட்மேன், பக்கத்துல டால்மியா சிமிண்ட் பூசி வீடு கட்டிட்டு இருந்த கொத்தனார் மேன் , சித்தாள் மேன் எல்லார் கிட்டயும் விவாதம் பண்ணிட்டுதான் இன்னொரு டி.வி. ஷோவுக்கு கெளம்பனாருன்னா பாத்துக்க. 

செந்தில்: பவர் ஸ்டார் உள்ள போனதும் அடுத்த பவர் ஸ்டாரை ஸ்டாக் வச்சி நமக்கு அனுப்பற ஆண்டவன் மகிமையே மகிமை. இல்லண்ணே?  

                                                                 
                                                               
                                  
தல: இல்ல. ராஸ்கோல். அது யாருடா அவரு பக்கத்துல??

செந்தில்: அவர்தாண்ணே எஸ்.ராமகிச்சுனன். மாவட்டத்துலேயே பேமஸ் சிந்தனை சிற்பி. 

தல: அட போடா. மாவட்டத்துல பெரியாளு. மாவாட்றதுல பெரியாளுன்னா  பம்மிருவனா? ஆளு பேர கேள்விப்பட்டதே இல்லையேடா?

செந்தில்: அட...ரஜினிய வச்சி கொஞ்ச நாளைக்கு முன்னாடி புக் ரிலீஸ் பண்ணாரே அவர்தான்.

தல: ஓ..அவரா... பாக்கறதுக்கு காங்கிரஸ் தலைவர்   பூனதேசிகனோட ட்வின் ப்ரதர் மாதிரியே இருப்பாரே. ரைட். 

செந்தில்: சரிண்ணே...

அவசரமாக ஒரு பேப்பரில் செந்தில் எதையோ எழுத..

தல: பன்னாட நான் சொன்னது right. write இல்ல. அப்பிடுவேன். இந்த ராமகிச்சு மேடைல பேச ஆரம்பிக்கிற நேரத்துல வெளில ஓடி வர்ற கூட்டத்துக்கு பட்டர் பிஸ்கட், (கார்ப்பரேஷன் தண்ணி) டீ வித்தே கேன்டீன் ஓனருங்க எல்லாம் ஆளுக்கு 5 வீடு வாங்கி இருக்காங்களாமே. அப்ப பெரிய ஜிம்பலக்கடி தான்.  அது யாருடா பக்கத்துல..lowest பட்ஜெட் மெகா சீரியல் கேரக்டர் ஆர்டிஸ்ட் மாதிரி...

செந்தில்: என்னண்ணே நீங்க வெவரம் தெரியாமலே வளந்துட்டீங்க. தலைவர் பேரு ஜெமோ.

தல:  ஜெர்மன் நாட்டு எழுத்தாளரா?

செந்தில்: ஐயோ..இப்படி ஒரு ஞானசூன்யத்து கிட்ட வந்து மாட்டிக்கிட்டனே.. இவரு நம்மூர்ல உங்கள விட டாப் ரைட்டர். ஜெயமோகனன்.

தல: ஓ...!! சுண்டிமோதிரத்த சுமோன்னு கூப்புடற மாதிரி ஜெமோவா? கண்ணா ....அவார்டுக்கு எதுக்குடா அவார்டு??

செந்தில்: 'நானெல்லாம் எவரெஸ்ட் சிகரத்துல தங்க சேர் போட்டு எழுத வேண்டியவன். இந்த தற்குறிங்க ஊர்ல பொறந்து இப்படி ஆயிட்டேன்'ன்னு பொலம்பராறு. ரோட்ல போறவன் எல்லாம் சினிமா விமர்சனம் எழுத ஆரம்பிச்சா தெற்காசியா எப்படி உருப்படும்னு உக்கிரமா உறுமிக்கிட்டு இருக்காரு. 

தல: எவர் ரெஸ்ட் எடுக்க வேண்டிய ரைட்டருங்க எல்லாம் எவரெஸ்ட் ரேஞ்சுக்கு பீல் பண்ண ஆரம்பிச்சுட்டாங்களா..சோ சாட். Customer is King னு க்ரான்ட்பா காந்தியே சொல்லி இருக்காரு. காசு கொடுத்து படம் பாத்தவன் எழுதிட்டு போறான். ஏண்டா எழுதறன்னு கூகிள் ஓனருங்க, நம்ம பேஸ்புக் மொதலாளி மார்க் ஜக்கர்பெர்க் கேட்டா அது நியாயம். இவருக்கு ஏன் பேன்ட் பின்னால ஸ்மோக் வருது???

                                                                 



ஆமா அது யாருடா தயிர் சட்டிக்குள்ள தலைய விட்ட மாதிரி. அட்லீஸ்ட் வாய்க்கு கீழயும், மேலயும் இருக்குற தயிற தொடச்சிட்டு வந்தா என்ன??

செந்தில்: (வேகமாக தல வாயை பொத்துகிறார்). சும்மா இருக்க மாட்டீங்களா?? தலைவர் பேருதான் சாறு....    

தல: எலுமிச்ச சாறா?   


செந்தில்: சூ...சைலன்ட். இந்த அங்கிள் எப்பவுமே ப்ரெஞ்ச் தாடிதான் வச்சிருப்பாரு. குடிக்கறதும் ப்ரெஞ்ச் ப்ராண்டுதான். அடிக்கடி 'என்னோட உண்டியல்ல சில்ற தீந்துருச்சி. காசு போட்டுட்டு போங்க'ன்னு வாலி விவேக் மாதிரி வசூல் பண்றவரு. சாட்டர்டே ஆனா டை அடிச்சிடுவாரு. சில்லி ஓல்ட் மேன்.  

தல: இது என்னடா தமாசு. சைனா டீ குடிக்க சைனாவுக்கே போகனுமா? ப்ரான்ஸ் பத்தி எழுத பாண்டிச்சேரில குத்த வச்சா பத்தாது? நமக்கே 7D சினிமாவா? யே யப்பா..எல்லாம் பெரிய டக்கால்டியா இருக்காங்களே..

வம்பளந்தவாறே இறுதியில் பரிசு வாங்குமிடத்திற்கு இருவரும் வந்து சேர்கிறார்கள்.

தல: ஐயா வணக்கமுங்க. ஐயய்யா வணக்கமுங்க.  கீபோர்ட் ல டைப் அடிக்கற எல்லாருக்குமே நம்ம அரசாங்கம் பட்டம் குடுக்கறது சந்தோசமுங்க. 

செந்தில்: ஐயா ஒரு சின்ன விண்ணப்பமுங்க. பரிசா தர்ற 10 TVS கீபோர்டை ஆளுக்கு அஞ்சா பிரிச்சி எங்களுக்கே தந்துடுங்க.

தல: ஆமா இந்த கீபோர்ட் எல்லாம் குடுக்கறீங்களே...அது ரஹ்மான் வாசிச்சதா...ஹாரிஸ் வாசிச்சதா...? கீபோர்ட் தொடைக்க கொழா பேன்ட் போட்ட சியர்ஸ் கேர்ல்ஸ் வேணுமே? அவங்களுக்கு கொழா தச்சி குடுப்பீங்களா? கொழா புட்டு வச்சி குடுப்பீங்களா?

கோபத்தில் நடுவர் கவுண்டரின் கன்னத்தில் பொளேரென போடுகிறார்...

நடுவர்: பேரென்ன?

தல: 'டெமோ'ங்க .

நடுவர்: 'டெமோ'வா? ஒழுங்கா பேர சொல்றியா இல்ல இன்னொரு தடவ கன்னத்துல டெமோ காட்டவா?

தல: ஐயா சாமி. சத்தியமா என்  முழுப்பேரு பேரு 'டெ'ன்சன் 'மோ'டிங்க. அடிக்கடி டென்சன் ஆகி கைக்கு வாக்கா இருக்குற ஆள இப்படி அப்பிடுவேனுங்க. 

அருகில் இருக்கும் மூத்த நடுவர் செவுலில் அப்புகிறார்.  

செந்தில்: எம் பேரு மானஸ்த புத்திரனுங்க. 

நடுவர்: இதுவர எத்தன புக்கு போட்டு இருக்கீங்க??

செந்தில்: என்னங்கய்யா இப்படி கேட்டுப்புட்டீங்க? LKG புக்ல இருந்து காலேஜ் புக் வரைக்கும் மொத்தம் 150 கிலோ புக்குங்கல பேப்பர் கடைல போட்டு இருக்கோங்க.

மூத்த நடுவர்: தம்பி..நம்ம அரசாங்கம் தமிழ்நாடே கண்டுக்காம விட்ட விளிம்பு நிலை ரைட்டருங்களுக்கும், 'நானும் ரைட்டர்'னு அவங்க கூட ஒத்து ஊதுற நாதஸ் பசங்களுக்கு மட்டும்தான் விருது தருது. உங்கள மாதிரி Facebook, Blog, Twitter ல மொளச்ச மஷ்ரூம் மடையனுங்களுக்கு இல்லப்பா.

செம காண்டாகி செந்திலை பெடலெடுக்கிறார் கவுண்டர்.

தல: நான் அப்பவே சொன்னேன் நம்மள மாதிரி ஆளுங்களுக்கு எல்லாம் கீபோர்ட் கெடைக்காதுன்னு. கேட்டியா. உச்சி வெயில்ல 4 மணிநேரம் லைன்ல நிக்க வச்சிட்டியேடா. அட்லீஸ்ட் ஒரு செகண்ட் ஒன்னுக்கு போக விட்டியாடா? அது மட்டுமா?? தேங்கா தலையன், மாங்கா தலையன் ஹிஸ்டரி எல்லாம் சொல்லி வெறுப்பேத்தி வேற இருக்க...

த பாரு..இந்த பக்கடா தலையன் எல்லாம் என்ன அறையறான்......

நடுவர் மீண்டும் கவுண்டரை அறைந்து..

"யோவ்...நெட்ல எழுதி பேரு வாங்க நெனைக்குற சில்லு வண்டுங்கள அடிக்கடி இந்த டாப் ரைட்டருங்க திட்டிக்கிட்டேதான் இருப்பாங்க. நாங்க அவங்களுக்கு அவார்ட் தந்துக்கிட்டேதான் இருப்போம். ரொம்ப பேசுன கடா சட்டத்துல புடிச்சி உள்ள போட்டுருவோம்"

அலற அடித்தவாறு ஓட்டம் பிடிக்கிறார்கள் டெமோவும், மானஸ்த புத்திரனும்.
.....................................


Posted by

! சிவகுமார்!
madrasbhavan.com


Monday, June 3, 2013

இரண்டாம் ஆண்டு தமிழ் வலைப்பதிவர் குழும சந்திப்புத் திருவிழா

சென்ற ஆண்டு மிகச் சிறப்பாக நடைபெற்ற தமிழ் வலைப்பதிவர்கள் சந்திப்பு விழாவைத் தொடர்ந்து இந்த ஆண்டும் சந்திப்பு விழாவை நடத்துவதற்காக ஏற்பாடுகள் துவங்கப்படுகின்றன. எந்த பதிவரையும் தனிப்பட்ட முறையில் முன்னிறுத்தாமல் நடந்த சென்ற ஆண்டு விழாவைப் போல் தான் இந்த ஆண்டும் நடத்தப்படுகின்றன. 


எனவே விருப்பமுள்ள அனைத்து பதிவர்களும் விழாக்குழுவில் தங்களை இணைத்துக் கொண்டு வரும் ஞாயிறன்று நடைபெற உள்ள ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொள்ளுங்கள். தங்களது ஆலோசனைகள் வரவேற்கப்படுகின்றன. 

ஒரு *முழு நாள்* நடக்க இருக்கும் இந்த வலைபதிவர்கள் சந்திப்பை எப்படி ஆக்கபூர்வமாகவும சுவாரஸ்யமாகவும் நடத்தலாம் என்ற தங்களின் ஆலோசனைகள் வரவேற்கப்படுகின்றது. முன் நின்று நடத்த ஆர்வமுள்ளவர்களும் வரவேற்கப்படுகிறார்கள்

எங்கு நடத்துவது, மண்டபம் எப்படி இருக்க வேண்டும், மதிய உணவு எப்படி ஸ்பெசலாக அமைய வேண்டும் என்று தொடங்கி விழா நிகழ்ச்சிகள் எந்த வரிசையில் அமைய வேண்டும் என்பது வரை கலந்துரையாடல் நடக்க இருக்கிறது.

விருப்பமுள்ள அனைத்து பதிவர்களும் கலந்து கொள்ள வேண்டுமாய் கேட்டுக் கொள்ளப்படுகிறது.


இங்கனம்
தற்காலிக விழாக் குழுவினர்கள்