Wednesday, December 4, 2013

புத்தகக் காட்சி பதிவின் டெம்ப்ளேட் – புதியவர்களுக்காக


அன்புள்ள வலைப்பூவிற்கு,

பழைய ஆட்கள் அடுத்த பத்தியை ஸ்கிப் செய்துவிடலாம்.

பபாஸிகாரர்கள் சர்க்கஸ் ஆட்கள் போல ஊர் ஊராக சென்று டெண்ட் அடுத்தாலும் ஜனவரி துவக்கத்தில் சென்னையில் கொட்டாய் போடுவது ரொம்ப ஸ்பெஷல். நம்ம ஆட்களுக்கெல்லாம் அது ஒரு திருவிழா மாதிரி...! சிலரெல்லாம் பத்துநாள் கண்காட்சி என்றால் பத்துநாளும் அங்கேயே பழியாய் கிடப்பார்கள். ‘சென்னை புத்தகக் காட்சி – நாள் ஒன்று’ என்று துவங்கி தினசரி பதிவு போடுவார்கள். இதுல பியூட்டி என்னன்னா நம்ம ஆட்கள் வருடா வருடம் எழுதுகிற புத்தகக்காட்சி பதிவில் எல்லாமே ஒரே மாதிரியாக இருக்கும். சொல்லப்போனால் கிட்டத்தட்ட அதே பதிவை தலைப்பில் 35, 36’ன்னு நம்பர் போடுவாங்களே... அதை மட்டும் மாத்தி போஸ்ட் போடுவாங்க. அந்த பதிவோட டெம்ப்ளேட்டை தான் இங்கே சொல்லித்தர போகிறேன். முற்றிலும் புதியவர்களுக்காக.

முதல் பத்தி, ஆரம்பப்பள்ளி பருவத்தில் டாபிக் கொடுத்து கட்டுரை எழுதச் சொல்வார்களே நினைவிருக்கிறதா...? அதுபோல ‘புத்தகக்காட்சியும் நானும்’ என்கிற தலைப்பில் பத்து வரிகளுக்கு மிகாமல் ஒரு பத்தி எழுத வேண்டும். அதாவது, நீங்கள் எந்த ஆண்டிலிருந்து புத்தகக்காட்சி செல்கிறீர்கள்...? புத்தகக்காட்சிக்கும் உங்களுக்குமான இணக்கம் குறித்தெல்லாம் எழுதலாம். முக்கியமாக, புத்தகக்காட்சி முந்தைய ஆண்டுகளில் கா.மி. கலைக்கல்லூரியிலும், புனித ஜார்ஜ் பள்ளி வளாகத்தில் நடைபெற்றதையும் குறிப்பிட்டு எழுத வேண்டும். 

அடுத்த பத்தியில், பு.கா அரங்க வாயிலிலிருந்து அரங்கம் வரை நீங்கள் நடந்து வந்ததை விவரிக்கலாம். எந்தெந்த எழுத்தாளர்களுக்கு தட்டி வைக்கப்பட்டுள்ளது...? எந்தெந்த ஜீ தமிழ் ஆண்ட்டிகள் பதாகைகளில் பல்லிளிக்கிறார்கள்...? எவ்வளவு கூட்டம் வந்திருந்தது...? சாலையிலிருந்து எவ்வளவு தூரம் நடக்க வேண்டியிருக்கிறது...? போன்றவைகளை குறித்துக்கொள்ளவும். அதன்பிறகு, சமகாலத்தில் மக்களிடையே வாசிப்பு குறைந்துவிட்டது. வெறும் ஆனந்த விகடன், குமுதம் மட்டும் படிக்கிறார்கள் என்பது போல எழுதி ஜல்லியடிக்கலாம். 

மெயின் மேட்டருக்கு வருவோம். முதல் வேலையாக மீனாட்சி புத்தக நிலையம் சென்று அங்கிருக்கும் சுஜாதாவின் மலிவு விலை புத்தகங்களை மொத்தமாக மூட்டை கட்டி வாங்கிவிட வேண்டும். வாங்கி அதை கமுக்கமாக வீட்டில் வைத்துவிட்டு வலைப்பதிவில் அதைப்பற்றி ஜம்பமடிக்கலாம். நாம படிக்கப்போறது ஒரு புஸ்தகம். எதுக்காக மூட்டை கட்டணும் என்றெல்லாம் கேட்கப்பிடாது. ஆனால் அங்கே இருக்கும் புஸ்தகங்களை காலி செய்துவிட்டோம் என்று உறுதியாக தெரிந்தபிறகு வலைப்பதிவில் இந்த மாதிரி இந்த மாதிரி ஸ்டால் நம்பர் 68ல் விற்பனை செய்யப்படுகிறது என்று ஒரு தகவல் கொடுக்கலாம்.

புத்தகக்காட்சி அலைச்சலில் உங்களுக்கு ஒன்னுக்கு வரலை என்றோ இளநியில தண்ணி வரலை என்றோ கவலைப்பட வேண்டாம். இருக்கவே இருக்கிறது லிச்சி ஜூஸ். ச்சே என்னதான் காலம் மாறிக்கிட்டே போனாலும் இந்த லிச்சி ஜூஸ் மட்டும் மாறாம இருக்கு பாத்தியா...? என்று நன்றாக வியாக்கியானம் பேசலாம். வலைப்பதிவில் லிச்சி ஜூஸ் எவ்வளவு...? எங்கே கிடைக்கிறது...? என்ற தகவலைக் கொடுத்து லிச்சி ஜூஸ் வாங்கலையோ லிச்சி ஜூஸ் என்று கூவலாம். கவலை வேண்டாம் லிச்சி ஜூஸ் விற்பனையாளர் பத்து சதவிகித லாபத்தை உங்களுக்கு கொடுத்துவிடுவார். ஆனந்த விகடன் மாதிரி மரியாதை தெரியாத ஆளு இல்லை.

அப்படியே கூடாரத்தை ஒருமுறை சுற்றிவந்து விட்டு பாப்பா ரைம்ஸ் கடைகள், வேர்க்கடலை சட்னி, தேங்காய் சட்னி, புதினா சட்னி கடைகள், விகடன், கிழக்கு என்று ஒரு அப்டேட் கொடுக்கலாம். இதில் முக்கியமான பகுதி என்னவென்றால், சமையல் குறிப்பு புத்தகங்கள் வாங்கும் அங்கிள்களை’யும், கோல புத்தகம் வாங்கும் ஆண்ட்டிக்களையும் சரமாரியாக கலாய்த்திட வேண்டும்.

இன்னொரு ப்ரோமோவை மறந்துவிட்டேன். காமிக்ஸ்...! பழைய போனியாகாத காமிக்ஸ்களை மூட்டை மூட்டையாக கட்டி காம்போ பேக்குகள் போல வைத்து பேக்குகள் போல இருப்பவர்கள் தலையில் கட்டுவார்கள். அதனை மறந்தும் வாங்கிவிடக்கூடாது. ஆனால் இந்த ஸ்டால் எண்ணில் காமிக்ஸ் விற்கப்படுகிறது. குறைந்த அளவே ஸ்டாக் உள்ளது. முந்துபவர்களுக்கே முன்னுரிமை என்று வலைப்பதிவில் அடித்துவிடவும். ஆனால் இன்னும் பத்து வருடங்கள் ஆனாலும் அந்த பழைய காமிக்ஸுகள் தீரவே தீராது. இதிலும் விளம்பரம் செய்பவர்களுக்கு கமிஷன் உண்டு.

முக்கியமான பகுதி, டிஸ்கவரி புக் பேலஸ் ஸ்டால் வாசலுக்கு சென்று நின்றுக்கொள்ள வேண்டும். அங்கே போகிற வருகிறவர்களை எல்லாம் பிடித்து நீங்க பட்டர்ஃபிளை தானே, யேய் அங்கப் பாரு பிபாஷா, பைத்தியக்காரன் வந்திட்டாரு, பிச்சைக்காரன் எங்கப்பா....? என்றெல்லாம் பொது ஜனத்துக்கு புரியாத பாஷையில் பினாத்திக்கொண்டு இருக்கவேண்டும். கடந்து செல்பவர்கள் நீங்கள் கண்டிப்பாக செலிபிரிட்டியாக இருக்க வேண்டும் என்று நினைக்கும் அளவிற்கு அலப்பறை கொடுக்க வேண்டும். இறுதியாக வேடியப்பன் சுடுதண்ணி பிடித்து மூஞ்சியில ஊத்துற வரைக்கும் காத்திருந்துவிட்டு நடந்த சம்பவங்கள் எல்லாவற்றையும் சுடுதண்ணி சம்பவம் முதற்கொண்டு வலைப்பதிவில் எழுதிவிட வேண்டும்.

அறச்சீற்ற பகுதி. பார்க்கிங் லாட்டில் பயங்கர கூட்டம், வண்டியை நிறுத்தவே இடமில்லை, அநியாயத்திற்கு கட்டணம் வசூலிக்கிறார்கள், அரங்கத்திற்குள் காற்றோட்டம் இல்லை, மக்கள் திரளை ஆர்கனைஸ் செய்வதில்லை, குடிநீர் வசதி போதுமானதாக இல்லை, கழிவறைகள் எங்கேயிருக்கிறது என்றே தெரியவில்லை. ஃபுட்கோர்ட்டில் காசை கொள்ளையடிக்கிறார்கள், நான்கு போண்டா ஐம்பது ரூபாய் என்பது வரைக்கும் பொங்கித்தள்ள வேண்டும்.

இறுதியாக, நீங்கள் வாங்கிய புத்தகங்களின் பட்டியல். கவனம்: பட்டியலில் வெளியிடப்போகும் புத்தகங்களை நீங்கள் வாங்க வேண்டும் என்றோ வாங்கினால் படிக்க வேண்டும் என்றோ அவசியமில்லை. சும்மா போட வேண்டியது தான். அதுக்காக வாழைக்காய் பஜ்ஜி செய்வது எப்படி...?, வல்லாரைக் கீரை தரும் பலன்கள் என்றெல்லாம் லுச்சாத்தனமாக லிஸ்ட் போடக்கூடாது. புத்தக டைட்டில்களை படித்ததும் அவனவன் கழிந்துவிட வேண்டும். உதாரணமாக, முட்டை போண்டாக்கள் உருண்டையாகத்தான் இருக்கின்றன, ஒரு ஆயாவும் ஆந்தையும், கரப்பான்பூச்சிகளை புணர்ந்தவன் போன்ற தலைப்புகளை லிஸ்ட் போடலாம்.

Get ready folks...!

என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN

Thursday, November 14, 2013

ஓநாயும் ஆட்டுக்குட்டியும்


ஓநாயும் ஆட்டுக்குட்டியும் வெளிவந்து ஒன்றரை மாதங்கள் ஆனபிறகு நேற்று அதனைப் பற்றி மூன்று அருமையான கட்டுரைகள் படிக்கக் கிடைத்தன.

1. வெகுளித்தனமல்ல அறியாமையின் கொடூரம் – ராஜன் குறை (காட்சிப்பிழை நவம்பர் 2013)
2. ஓநாயும்ஆட்டுக்குட்டியும் தவளைகளும் – ரோஸாவசந்த் (காட்சிப்பிழை நவம்பர் 2013)

மூவருக்கும் ‘மூக்கு’ புடைப்பாக இருக்கக்கூடும் என்பது என்னுடைய ஆகச்சிறந்த அவதானிப்பு. ஏன் சொல்கிறேன் என்றால் மூன்றுமே நல்ல கட்டுரைகள் என்றாலும் படித்ததும் சட்டென புரிந்துக்கொள்ள முடியாத அளவிற்கு ‘சொயட்டி சொயட்டி’ எழுதியிருக்கிறார்கள். யாருக்குமே புரியாம எழுதி அப்படி என்னடாப்பா சாதிக்க போறீங்க ? சுரேஷ் கண்ணன் நம்மாளு தான். முன்பெல்லாம் நல்லாத்தான் எழுதிக்கொண்டிருந்தார். யாரோ அவரை உயிர்மை, தயிர்மை’ன்னு செமயா ஏத்தி விட்டிருக்காங்க. இப்பல்லாம் மனிதர் புல்ஸ்டாப் வைக்காம ஒரே வாக்கியத்துல ஒரு நான்கு பக்க கட்டுரையை கட்டமைக்க முயன்றுக்கொண்டிருக்கிறார்.

சரி, கம்மிங் டூ த மேட்டர். நாம் பார்க்கும் திரைப்படங்கள் எதார்த்த வாழ்க்கைக்கு நெருக்கமாக இருப்பதையே நம்மில் நிறைய பேர் விரும்புவோம். ஃபேண்டசி, ஹாரர் போன்ற சில ஜானர்களை தவிர்த்து மற்ற படங்களில் லாஜிக் இருக்க வேண்டும் என்றே விரும்புகிறோம். ஆனால், பெரும்பாலும் தமிழ் சினிமாவின் கமர்ஷியல் சினிமாக்களில் அது இருப்பதே இல்லை. இல்லையென்பது கூட பரவாயில்லை, லாஜிக் இல்லையென்பதை சுட்டிக்காட்டுவதே பெரிய தவறாகி விட்டது. இணையத்தில் புழங்குபவர்களே ஏதோ இயக்குநருடன் ஒரே தட்டில் சாப்பிட்டவர்கள் போல தம் கட்டி வாதாடுகிறார்கள். மாஸ் படத்தில், மசாலா படத்திலெல்லாம் லாஜிக் பார்க்கக்கூடாதாம் ! எக்கேடோ கெட்டு ஒழியட்டும்.

ராஜன் குறை தன்னுடைய கட்டுரையில் ஒரு விஷயத்தை குறிப்பிட்டிருக்கிறார் :- தர்க்கரீதியான கேள்விகளையெல்லாம் வெகுஜன சினிமாவில் கேட்கக்கூடாது என்பது நியாயம்தான். ‘சிவாஜி தி பாஸ்’ படத்தில் தன்னைத்தானே எலக்டிரக்யூட் செய்துகொண்ட ரஜினியை அரைமணிநேரம் கழித்து நெஞ்சில் அயர்ன் பாக்ஸ் வைத்து பூப்போல ரகுவரன் காப்பாற்றவில்லையா ? அது மட்டும் நியாயமா என்று நீங்கள் கேட்கலாம். சரி அப்படிப்பட்ட மசாலா படம் தான் இது என்றால் கலையோ கலை என்று கூப்பாடு போடுகிறார்கள் என்றுதான் புரியவில்லை.

ராஜனின் மேற்கூறிய வரிகளிலிருந்து துவங்குகிறேன். ஓநாயும் ஆட்டுக்குட்டியும் ஒரு நல்ல பொழுதுபோக்கு சித்திரம் என்பதில் எனக்கு எந்த மாற்றுக்கருத்துமில்லை. ஆனால் திடீரென ஏன் உலக சினிமா, கலை, பின்நவீனத்துவம் என்றெல்லாம் ஜல்லியடிக்கிறார்கள். அப்படியெல்லாம் சொல்லுமளவிற்கு ஓநாயும் ஆட்டுக்குட்டியும் படத்தில் என்னதான் இருக்கிறது எனக்குப் புரியவில்லை. மூன்று கட்டுரைகளிலிருந்தும் எனக்குத் தெரிந்த தமிழில் நான் புரிந்துக் கொண்டவைகளை மட்டும் தொகுத்து சில கேள்விகளை முன் வைக்கிறேன். ஓநாயும் ஆட்டுக்குட்டியும் படத்தை சிலாகிப்பவர்கள் பதில் சொல்லட்டும்.

1. ஒரு மனிதன் குண்டடி பட்டிருக்கிறான். அது உடலின் ஏதோவொரு பாகத்தில் பாய்ந்திருக்கிறது. குண்டை வெளியே எடுத்து ரத்த சேதத்தை நிறுத்தி கட்டு போட்டால் உயிர் காப்பாற்றப்படும். எதற்காக spleenஐ வெளியே எடுக்க வேண்டும் ? ஸ்ப்ளீன் கோபத்தின் பிறப்பிடம் என்று தவறாக நம்பப்பட்டதன் அடிப்படையில் அது குறியீடாக இருக்கிறதா ? ஸ்ப்ளீன் என்பது ரத்தத்தை சுத்திகரிப்பு செய்யும் உறுப்பு. அதில் போய் குண்டு மாட்டிக்கொண்டால் கடுமையான ரத்த சேதம் ஏற்படும். அந்த நிலையில் நோயாளியின் வயிற்றை அறுத்து ஸ்ப்ளீனை வெளியே எடுத்தால் ரத்த சேதம் அதிகரிக்கும். எனவே நோயாளிக்கு தேவை அவருடைய வகை ரத்தம். மாற்று ரத்தம் ஏற்பாடு செய்யாமல் ஸ்ப்ளீனில் அடிபட்டு அரைமணி நேரத்திற்கு மேல் உயிருக்கு போராடும் ஒருவனை எப்படி காப்பாற்ற முடியும் ?

2. மண்ணீரல் அகற்றப்பட்ட நபர் எட்டு நாட்களுக்குப்பின் எழுந்து நடமாடலாம் என்று படத்தில் இரு கதாபாத்திரங்கள் மூலம் சொல்லப்படுகிறது. ஆனால் உல்ஃப் ஆறாவது நாளிலேயே வெளியே வந்துவிடுவதாக கதை செல்கிறது. பிரச்சனை என்னவென்றால் உல்ப் அறுவை சிகிச்சை முடிந்து சில மணி நேரங்களுக்குள்ளாகவே சந்துருவின் வீட்டிலிருந்து வெளியேறி விடுகிறான்.

3. தன்னைக் காப்பாற்றிய சந்துரு என்கிற மருத்துவ மாணவனை வரவழைத்து, துப்பாக்கி காட்டி மிரட்டி, தன் உயிரை காப்பாற்றியனை பலவந்தமாக கடத்தி கொண்டு போகிறான்  வுல்ஃப்.  எதற்காகத்தான் அந்த பையனை கடத்துகிறான்? கதைப்படி அதற்கான தேவை என்ன? கதைப்படி வுல்ஃபின்  நோக்கம் யாருக்கும் எந்த சந்தேகமும் வராமல், கண்காணிப்பிற்கு ஆளாகாமல் அந்த அம்மா அப்பா ஆடுகளையும் குழந்தை ஆட்டுகுட்டியையும் அந்த 'ஹிந்திக்கார பார்ட்டி'யிடம் சேர்ப்பது; சேர்ந்து தானும் தப்பிப்பது; இடையில் கல்லறையில் ஒரு மெழுகுவர்த்தி பிரார்த்தனை. வுல்ஃப் ஆபேரேஷன் ஓய்வு நாட்கள் முடியும் முன்பு வெளியே வர மாட்டான் என்ற நம்பிக்கையில் போலீஸ் திவிரமாக கண்காணித்து கொண்டு இருக்க மாட்டார்கள். இடையில் ஆறாவது நாளே யாருக்கும் தெரியாமல் வுல்ஃப் தனது மேற்படி கடமையை முடிப்பது எளிதானது. ஆனால் அவனோ சந்துருவை கடத்துவதன் மூலம், ஒட்டுமொத்த போலீசின் கவனத்தையும் தன் பக்கம் திருப்பி, இரவுகளில் தான் இருக்கும் இடங்களை  ஊகிக்க விட்டு, தானிருக்கும் சுற்று வட்டாரத்தில் தேடவிட்டு, மாட்டிகொள்ளும் ரிஸ்க்கை காரணமே இன்றி எடுக்கிறான்.

4. ஒரு காட்சியில் ஓடிக்கொண்டிருக்கும் ரயிலிருந்து உடலில் காற்றடைத்த பையைக் கட்டிக்கொண்டு உல்ஃபும் சந்துருவும் குதிக்கிறார்கள். இந்த காட்சியை பார்க்கும்போது வடிவேலு மெத்தையை பாராசூட் போல கட்டிக்கொண்டு மாடியிலிருந்து குதிக்கும் நகைச்சுவை காட்சிதான் நினைவுக்கு வருகிறது. சரி, உல்ஃப் ஒரு சாகசக்காரன். அவன் அதையெல்லாம் அசால்டாக செய்வான் என்று வைத்துக்கொள்வோம். சந்துரு ? வெறும் தலையணையை மாரில் கட்டிக்கொண்டு குதித்தால் மூளை சிதறிவிடாதா ?

5. உல்ஃபின் நோக்கம் என்று பார்த்தால், அந்த அம்மா அப்பா ஆடுகளை, குழந்தை ஆட்டுக்குட்டியை காப்பாற்றுவது. மிஷ்கின் கண்ணிமைக்காமல் சொல்லும் அந்த கதையின் படி, தம்பா கும்பலுக்கும் அந்த ஆட்டுக் குடும்பத்திற்கும் எந்த பிரச்சனையும் இல்லை. பிரச்சனையே இந்த ஓநாய் மனம் திருந்தி அவர்களுடன் தங்குவதுதான். கதையிலேயே அந்த குடும்பத்தை பார்த்துகொள்ள பாரதி அக்கா, இரவில் கூட பாட்டுப்பாடிக் கொண்டிருக்கும் கண்தெரியாதவர்கள் சமூகமே இருக்கிறது. அவர்கள் வாழ்வதற்கு கண் தெரியாததை தவிர  வேறு  பிரச்சனை இருப்பதாக தெரியவில்லை. விபத்து போன்ற சம்பவத்தில் மகன் இறந்த பிறகான  வாழ்க்கையில் இருக்கும் தீவிர பிரச்சனை இந்த ஓநாய்தான். இந்த ஓநாய் கூட இருப்பதால்தான்,  ̀வேட்டைக்கு வாவேட்டைக்கு வா…' என்று வற்புறுத்தும் தம்பா அந்த குடும்பத்திற்கும் பிரச்சனை தருகிறான்.

6. மூன்று ஆட்டுக்குட்டிகளை காப்பாற்றுவதற்காக படமெல்லாம் எத்தனை ஆட்டுக்குட்டிகளை பலி கொடுக்கிறார் உல்ஃப். “தண்ணி... தண்ணி...” என்று துடிக்கும் போலீஸ் அதிகாரி, “ஐயா” என்று விளிக்கும் போலீஸ் அதிகாரி, மேலும் சில போலீஸ்காரர்கள், பாரதி அக்கா, விஜயா ஃபோரம் மால் காவலாளி, கடைசியில் அம்மா அப்பா ஆட்டுக்குட்டிகள்.

ரோஸாவசந்த் கட்டுரையிலிருந்து சில பத்திகள் :

உண்மையிலேயே இது ஒரு சுவாரசியமான வெகுஜன திரில்லராக இருந்தால் அது தன்போக்கில் ஹிட்டாகியிருக்கும். மக்களின் ரசனையின்மையை  திட்டவேண்டிய அவசியமே இருந்திருக்காது. வெகுமக்களை கவராத ஒரு படத்தை ஊடகங்கள், ஆர்வக்கோளாறு கொண்ட இணைய எழுத்தாளர்கள், பலூன் வண்ணத்தை பார்த்து மயக்கியவர்கள், உண்மையிலேயே படத்தின் ஒரே உன்னதமான இளையராஜாவின் இசைக்கு ரசிகர்கள் எல்லாம் சேர்ந்து ஏதோ ஒரு சென்சேஷன் அலையை உருவாக்கி, தாங்களும் அதில் மிதந்து படத்தை இந்த அளவிற்கு கொண்டு வந்திருக்கிறார்கள். 

படத்தில் குறியீடுகள் பொங்கி வழிவதாக என்னவெல்லாமோ வியாக்யானம் சொல்கிறார்கள். முதலில் ஒன்றை தெரிந்துகொள்ளவேண்டும். சினிமாநாவல், சிறுகதை போன்ற ஒரு கதையாடல் சார்ந்த கலையில் கதைதான் முதலில் முக்கியமானது. கதை தீவிர இலக்கியமாக மாறும் போதுதான் குறியீடு பற்றி பேசுவதில் அர்த்தம் உண்டு. கோபால்ஜி உபன்யாசம் மாதிரி   ̀அப்படி பார்க்க கூடாதுஇதெல்லாம் குறியீடு' என்பது உளரல்.  கதை என்பது நேர்கோட்டில் இல்லாமல் இருக்கலாம்; சிதறலாக துண்டு துண்டான உளரலாக இருக்கலாம்; கதை என்று நாம் கருதிக்கொண்டிருக்கும் எதுவும்  இல்லாமல் கூட ஒரு கதை இருக்கலாம்; அதிலும்  கதையாடலைத்தான் நாம் முக்கியப்படுத்த வேண்டுமே தவிர குறியீட்டை அல்ல. கதை எந்த பிரச்சனையும் இன்றி தன்னை நிறுவிய பிறகுதான், அதில் உள்ள குறியீடுகளை பற்றி பேசமுடியும். ஒருவேளை கதையல்ல, குறியீடுகள்தான் படம் என்றால்நம்மால் ஒரு கதாதர்க்கமாக சிந்திக்கவே முடியாமல், கதையை மனதில் உருவாக்கவே முடியாமல் படிமங்களாக மட்டும் காட்சிகள் நகர்ந்திருக்க வேண்டும். மேலும் பலர் சொல்லும் குறியீடுகள்  பொருந்துவதில்லை என்பதுடன், குறியீடுகளின் அர்த்தங்கள் ஒன்றுக்கு ஒன்று அபத்தமாக முரண்படுகிறது. 

யோசிக்க யோசிக்க ஒரு கட்டுரையில் அடக்க இயலாதபடி முடிவே இல்லாமல் இந்த படத்தின் பிரச்சனைகள் வந்துகொண்டே இருக்கின்றன. இவ்வளவு சொதப்பலான கதையம்சம் கொண்ட படத்தை எதற்காக இத்தனை பேர் பாராட்டுகிறார்கள்காமிக்ஸ் என்கிறார்கள்; விவிலியத்தில் இருந்து மேற்கோள் காட்டுகிறார்கள்; அதிகாரம் பற்றியது, சாதாரணன் அதிகாரத்துக்கு எதிராக எதிர்வினையாற்றுவது என்று என்னவெல்லாமோ சொல்கிறார்கள். இவர்கள் பொய்யாக பாராட்டவில்லை என்பதுதான் அதிக கிலியை உண்டு பண்ணுகிறது. படத்தில் ஒரு மயக்கம் இருப்பது உண்மை என்றாலும், கருத்து சொல்லும் முன், கருத்தை தனக்குள் உருவாக்கும் போது யோசிக்க மாட்டார்களா? இத்தனை உலகப்படங்கள் பார்த்து வருபவர்களுக்கு எதுவுமேவா நெருடவில்லை. பாட்டு, காமெடி ட்ராக் போன்ற தமிழ் சினிமாவின் வழமைகள் இல்லாததும், மிஷ்கினின் அடையாளமான மஞ்சள் புடவை இல்லாததும் ஒரு படத்தை  ̀உலகத்தர'மானதாக்கி விடுமா? இந்த  ̀இல்லாதது' என்பது எப்படி ஒரு படத்தின் சிறப்பாக முடியும் என்பது புரியவில்லை. கதையோடு ஒட்டிய உணர்வுகளை மிகைப்படுத்தும் வழமையான தமிழ் சினிமா மிகைநடிப்பை விட, கதாபூர்வமாக ஒட்டாத உணர்வுகளை வித்தியாசமாக மிகைப்படுத்தும் இப்பட காட்சிகள் ஏன் கொண்டாடப்படுகிறது? சமரசம் செய்யாமல் எடுத்திருக்கிறார், அதனால் பாராட்ட வேண்டும், குறை கண்டுபிடிக்க கூடாது  என்கிறார்கள். சமரசம் செய்யாமல் எதை அளித்தாலும் நாம் ஏற்கவேண்டுமா? சமரசம் செய்யாமல் எடுத்ததாக நினைப்பதால், குறைகளை கண்டுகொள்ளாமல் நாம் சமரசத்துடன் பார்க்கமுடியுமா?

Friday, October 11, 2013

யார் அடுத்த கேபிள் சங்கர் ?


கேபிளார் பதிவர் என்ற நாற்காலியை விட்டகன்று இயக்குநர் நாற்காலியில் துண்டைப் போட்டுவிட்டார். அன்னார் விட்டுச் சென்ற நாற்காலி சும்மாத்தானே இருக்கிறது. அங்கே அடுத்ததாக உட்கார தகுதியுள்ள வலைப்பதிவர் யாரென்று ஒரு அலசல். அடப்பாவிகளா ரெண்டு வாரம் கொத்து பொரோட்டா போடல’ன்னா ஃபீல்ட் அவுட்டா என்றெல்லாம் அலறக்கூடாது. இது சும்மா ஜாலிக்காக...!

முதலில் கேபிளாரைப் பற்றி நல்ல வார்த்தைகளாக நான்கைச் சொல்வோம். அதுதானேய்யா ஒலகவழக்கம். பதிவுலகம் நிறைய திறமைசாலிகளை கண்டிருக்கிறது. அவர்கள் ஒட்டுமொத்தத்திலும் கேபிளார் தான் ஆகச்சிறந்த படைப்பாளர் என்று சொன்னால் சாமி கண்ண குத்திடும். கேபிளை விட பல திறமையான வலைப்பதிவர்கள் நம்மிடையே இருந்திருக்கிறார்கள். இருக்கிறார்கள். ஆனாலும் கேபிள் தான் தி மோஸ்ட் பாப்புலர். கேபிளின் இந்த புகழிற்கு இரண்டு முக்கியமான காரணங்களைச் சொல்லலாம். ஒன்று கன்சிஸ்டென்சி. நான்கைந்து வருடங்களாக தொடர்ந்து எழுதிக்கொண்டே இருப்பதெல்லாம் வாயில் சொல்வதற்கு மட்டும் வேண்டுமானால் சுலபமாக இருக்கலாம். அதனை சாதித்துக் காட்டியவர் கேபிள். இரண்டாவது, காண்டாக்ட்ஸ். நேற்று வலைப்பூ தொடங்கிய குரங்கு குப்பனிடம் கூட ஈகோ காட்டாமல் பழகுவார், சார் ஒஸ்தாரா பாட்டுக்கு காஜலை விட சிறப்பாக ஆ(ட்)டிக் காட்டுவார். அதனாலேயே கேபிளுக்கு வாசகர்கள் அதிகம்.

இவ்விரண்டு விஷயங்களைத் தாண்டி இன்னொரு விஷயம் இருக்கிறது. பொதுவாக பதிவுலகில் கேபிளை தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டாரோடு ஒப்பிடலாம். இப்போது வேண்டுமானால் நீங்கள் முந்தய பத்தியை சூப்பர் ஸ்டாரை மனதில் வைத்து ஒருமுறை படித்துக்கொள்ளலாம். தமிழ் சினிமாவில் எந்த நடிகர் – நடிகையாக இருந்தாலும் ரஜினியை எனக்கு பிடிக்காது என்று சுலபமாக சொல்லிவிட முடியாது. அதுபோல தான் கேபிளும். இருவரும் வயதானாலும் இன்னமும் ‘யூத்து’ என்று சொல்லிக்கொள்பவர்கள். கேபிளின் சூப்பர்ஸ்டார் பிம்பத்தைப் பற்றி தனிப்பதிவாக கூட எழுதலாம் ஆனால் இதற்கு மேல் எழுதினால் கேபிளின் அடிபொடிகள் நம் வாயில் கத்தியை விட்டு சுற்றுவார்கள் என்பதால் நிறுத்திவிட்டு நேரடியாக பதிவுக்கு செல்கிறேன்.

மணிகண்டனை இந்த பட்டியலில் சேர்த்திருக்கிறோம் என்கிற விஷயம் அவருக்குத் தெரிந்தால் உதைக்க வந்தாலும் வருவார். ஏனெனில் அவர் ஏற்கனவே உயிர்மையில் புத்தகம் வெளியிட்டு, சுஜாதா விருதெல்லாம் வாங்கி, மனுஷ், சாரு போன்ற கெடா மீசைகளுடன் மல்லு கட்டுபவர். ஆனால் ஏனோ தற்போது பதிவுலகில் தீவிரமாக இயங்கி வருவதால் அவரை ஆட்டத்தில் சேர்த்துக் கொள்கிறோம். மணிகண்டன் தன்னுடைய வாசகர்களால் ‘ஜூனியர் மண்ட’ என்று அன்போடு அழைக்கப்படுபவர்.

ப்ளஸ்: சுஜாதா பாணி எழுத்து நடை, ஒரு வரி செய்தியைக் கூட சுவாரஸ்யமான கட்டுரையாக்கி விடும் லக்கிலுக்குத்தனம், ஒன்றரை வருடங்களாக தொடர்ச்சியாக எழுதி வருவது, மேல்மட்ட குழுவுடன் நட்பில் இருப்பது.

மைனஸ்: கீழ்நிலை வாசகர்களிடமிருந்து விலகியிருப்பது, ஒரே மாதிரியாக எழுதிக்கொண்டே இருப்பது, எவன் என்ன சொன்னால் எனக்கென்ன என்கிற ரீதியில் கெத்து காட்டிவிட்டு ரோட்டில் ஆட்டோக்கார் சாவுகிராக்கி என்று திட்டினால் கூட ஒரு புலம்பல் இடுகை போடுவது.

கேபிளைப் போலவே சமகாலத்தில் கொஞ்சம் பிஸியாக இருப்பவர். எனினும் அதற்காகவெல்லாம் அவரை அவ்வளவு எளிதாக புறக்கணித்துவிட முடியாது. பதிவுலகில் கொஞ்சம் சீனியர் என்றாலும் கடந்த இரண்டரை வருடங்களாக தொடர்ந்து எழுதி வருபவர். தமிழ்மணத்தை கிட்டத்தட்ட ஓராண்டு காலம் ஒன் மேன் ஆர்மியாக ஆட்சி செய்தவர். பதிவுலகில் இயங்கிவரும் பல குழுக்களுடன் நண்பராக பழகி வருவதாக சொல்லிக்கொல்பவர்.

ப்ளஸ்: வெரைட்டியாக எழுதுவது, ஒரு விஷயத்தைப் பற்றி எழுதும்போது தன்னுடைய கருத்தை மட்டும் சொல்லாமல் கழுகு பார்வை பார்த்து வாசகர்களை மனதில் கொண்டு எழுதுவது, பதிவு எழுத செலவிடும் உழைப்பு, நிறைய பேரிடம் நட்பு பாராட்டுதல்.

மைனஸ்: தொடர்ச்சியாக எழுதுவதால் குறைந்து வரும் எழுத்துத்தரம், சின்னச் சின்ன விஷயங்களுக்கெல்லாம் டென்ஷன் ஆவது, நீங்க என்ன பாராட்டுறீங்களா ஓட்டுறீங்களா என்று சோபிக்கண்ணு மாதிரி கேட்பது.

யெஸ், தி ஒன் அண்ட் ஒன்லி மெட்ராஸ் பவனார். சிவகுமாருக்கும் கேபிளுக்கும் நிறைய விஷயங்களில் ஒத்துப்போகும். இருவருமே சினிமா ஸ்பெஷலிஸ்ட்ஸ். கேபிளைப் போலவே காண்டாக்ட்ஸை நிறைத்து வைத்திருக்கும் வித்தகர். கடந்த மூன்று வருடங்களாக நிதானமாகவும் நிலையாகவும் பதிவுலகில் வளர்ந்து வருபவர். பதிவுலகில் கிட்டத்தட்ட எல்லோருமே நல்ல மனுஷன்யா என்று சொல்லுமளவிற்கு பெயர் பெற்றவர். எல்லாவற்றையும் விட முக்கியமானது, இருபெரும் ‘கே’ பதிவர்களின் ஆசி பெற்றவர்.

ப்ளஸ்: சினிமா சார்ந்த பதிவுகள், எந்த டாப்பிக் கொடுத்தாலும் அதைப்பற்றி குறைந்தபட்சம் ஒண்ணேமுக்கால் மணிநேரமாவது தம் கட்டி பேசுவது, இயல்பாக வெளிப்படும் நகைச்சுவையுணர்வு, எல்லோரிடமும் எளிமையாக பழகி நட்பு பாராட்டுவது.

மைனஸ்: திறமையிருந்தும் சினிமா தவிர்த்து பிறதுறை சார்ந்த பதிவெழுத முயற்சி செய்யாதது, ‘பாரம்பரிய’ பதிவர்களிடமிருந்து விலகியிருப்பது, எல்லோரிடமும் நல்ல பெயர் வாங்க நினைப்பதால் சில சமயங்களில் எந்த பக்கம் ஸ்டாண்ட் எடுப்பது என்று புரியாமல் குழம்பி நிற்பது.

ரைட்டு. வாசகர்கள் இம்மூவருள் தங்கள் மனதைக் கவர்ந்தவர் அல்லது அடுத்த கேபிள் என்னும் சொல்லிற்கு யார் தகுதியானவர் என்ற தங்களுடைய கருத்தை பின்னூட்டத்தில் பதிவு செய்யலாம்.

வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்படும் பட்சத்தில் தொடரும்

என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN