Saturday, May 5, 2012

ராஜா ராஜா தான்...!


அன்புள்ள வலைப்பூவிற்கு,

இரவு பகலின் மீதான தன்னுடைய பாசத்தை வெளிப்படுத்த காதுவரைக்கும் கம்பளி போர்த்திக்கொண்டிருந்த சமயம், மதுக்கோப்பையில் இருந்து கசியும் கடைசி துளியின் நுனியில் இருந்துதான் ராஜாவுக்கும் எனக்குமான உறவு தொடங்கியது. மானிட்டரா பேக் பைப்பரா என்று நினைவில்லை, ஏதோ ஒரு கட்டிங் சரக்குடன் சைடு டிஷ்ஷுக்காக தலை சொறிந்தபடி என் டேபிளுக்கு முன்னால் நின்றுக்கொண்டிருந்தார். 

ஆழ்ந்த சிந்தனையில் ராஜா சார்...!
பத்து வருடங்களாக ஒரே பிராண்ட் சர்க்கடிப்பவனை நீங்கள் பைத்தியக்காரன் என்று அழைப்பீர்களானால் என்னை பைத்தியக்காரன் என்றே அழையுங்கள். ஆம், ராஜா பைத்தியங்களிலே நான் ராஜ பைத்தியம். ராஜா சார் என்று அனைவராலும் மரியாதையோடு அழைக்கப்படும் புள்ளிராஜாவோடு சரக்கடித்த என்னுடைய நாட்கள் இனிமையானவை. அவருடைய ஓசி குடியில் ஒரு ஃபுல் பாட்டில் நெப்போலியன் காலியாவதை மாம்பலம் ரயில் நிலையம் மிக மிக அருகில் அமர்ந்து பார்த்திருக்கிறேன்.

பிரபா ஒயின்ஷாப்பில் மிகச்சரியாக காலை பத்து மணிக்கெல்லாம் கடை திறந்ததும் ஒரு அம்பாசடர் கார் வந்து நிற்கும். அது கடந்து சென்றதும் எங்கிருந்தாவது நேற்றிரவினுடைய ஹேங் ஓவரோடு தள்ளாடியபடி வருவார் ராஜா சார். நேராக கழிவறைக்கு அருகிலுள்ள தன்னுடைய பிரத்யேக டேபிளுக்கு சென்று அமர்ந்துக்கொள்வார். கடை ஓனர் ப்ரேம் செய்யப்பட்ட, லேமினேட் செய்யப்பட்ட, அவருக்கு பிடித்தமான பாபிலோனா, குயிலி, சிலுக்கு படங்களுக்கு அருகே ஏற்றிவைத்திருக்கும் ஊதுபத்தி வாசனையில் அந்த அறையே ஒரு ரம்மியமான சூழலை உணர்த்தும். ராஜா சார் நுழைந்ததும் அது “ரம்”மியமான சூழலாக மாறும். அன்றைக்கு அடிக்க இருப்பது என்ன சரக்கு, மிக்சிங்கிற்கு மினரல் வாட்டரா செவன் அப்பா, சைடு டிஷ் என்ன வேண்டும் என்பதையெல்லாம் மிகப்பணிவோடு அவரருகில் வந்து கேட்டுச்செல்வான் கடைப்பையன். ஓசி சரக்கு என்றால் அதை யார் வாங்கித்தருவார் என்று கூட தெரிந்து வைத்திருப்பான் கடைப்பையன்.

ஏற்கனவே அந்த அறையில் வந்து பவ்யமாக அமர்ந்திருக்கும் அன்றைய தினத்தின் ஓசி குடி ஸ்பான்சர் இரண்டு பிளாஸ்டிக் டம்ளர்களை கொண்டு வந்து டேபிளில் வைப்பார். அநேகமாக அது முந்தய நாள் இரவு எவனாவது குடித்துவிட்டு போட்ட எச்சில் டம்ளராக இருக்கும் சில சமயங்களில் ஓரிரு மாதங்களுக்கு முன்பு ராஜா சாரே பயன்படுத்திய டம்ளராக இருப்பது ஆச்சர்யம். ஒரே ஒருமுறை தான் கிளாஸில் மினரல் வாட்டர் ஊற்றிக்கழுவுவார். (எச்சில் க்ளாஸ் கழுவும் முறை பற்றி வேறொரு பதிவில் விவரிக்கிறேன்). பின்னர் சற்று தொலைவில் காத்திருக்கும் கடைப்பையனை அழைத்து சிக்கனில் கட்டாயம் லெக் பீஸ் வரவேண்டுமென கேட்டுக்கொள்வார்.

பின்னர் சற்று நேரத்தில் அங்கிருந்து கிளம்பி மாடியிலிருக்கும் ரூஃப் டாப்புக்கு வருவார். ஏற்கனவே ஆங்கே தண்ணியடித்துக் கொண்டிருக்கும் குடிமகர்கள் அதுவரை சமூக ஆர்வம் கொண்ட பதிவர்கள் போல அரட்டை அடித்துக்கொண்டிருப்பார்கள். ராஜா சார் உள்ளே நுழைந்ததும் சட்டென அறையே நிசப்தமாகும். எங்கே பிடுங்கி குடித்துவிடுவாரோ என்று அனைவரது கரங்களும் அவரவர் குவளைகளை இறுக்கமாக பற்றியிருக்கும். விஸ்கி, பிராந்தி, ரம், பீர், வோட்கா என்று அவரவர் விருப்பப்பட்ட சரக்குகளை வாங்கி அடித்துக்கொண்டிருப்பார்கள்.

பிராந்தி அடிப்பவர்கள் மட்டும் சுமார் ஐம்பது பேர் இருப்பார்கள். அந்த ஐம்பது பேரில் ஒரு ஆங்கிலோ இந்தய ஆயாவும் அடக்கம். (தற்போது அந்த ஆயா பெசன்ட் நகர் சுடுகாட்டில் அடக்கம் செய்யப்பட்டிருக்கிறார்). இப்போது கேட்டாலும் கிடைக்காத சரக்கொன்றை தன் கவுனுக்குள் மறைத்தபடி பிரபா ஒயின்ஷாப்பிற்குள் நுழைவதை பல நாட்கள் ஒளிந்திருந்து பார்த்திருக்கிறேன். யாரிடமும் பேச மாட்டார். பாட்டிலை திறப்பார், மினரல் வாட்டர் வந்ததும் மிக்ஸ் பண்ணுவார், சரக்கடித்து முடித்ததும் மறுபடியும் காலி பாட்டிலை கவுனுக்குள் மறைத்தபடி கிளம்பிவிடுவார். 

மற்ற சரக்கு அடிப்பவர்களோடு சேர்த்து மொத்தம் எண்பது பேர் வரை என்று அந்த சபையே குடிகாரர்களால் நிரம்பி வழியும். மிக்ஸ் பண்ணுவதற்கு இரண்டு நிமிடங்கள் மட்டுமே கொடுப்பார் ராஜா சார். சியர்ஸ் என்று உச்சஸ்தாயியில் ராஜா சார் கத்தியதும் எண்பது குடிகாரர்களும் ஒரே கல்ப்பில் சரக்கடிக்கும் காட்சி பரவச நிமிடங்கள். இதேமாதிரி ஆளுக்கொரு ஆஃப் அடித்து முடிக்கும்போது மணி சரியாக பன்னிரண்டு ஆகியிருக்கும்.

மூச்சா ப்ரேக்.

அஞ்சு நிமிடத்தில் அனைவரும் திரும்ப வந்து தயாராக இருப்பார்கள். மறுபடி ஒரு ஆஃப். இந்தமுறை எம்.சி அடிக்கும் முனுசாமியோ, பகார்டி அடிக்கும் பழனிவேலோ சியர்ஸ் சொல்ல அத்தனை பேரும் மூன்று நிமிஷம் உற்சாகம் பீரிட குதூகலிக்கும் காட்சி ஆகா அடடா...! 

காலை பத்து மணிக்கு கருத்தரித்த ஒரு ஃபுல் பாட்டில் சரக்கு ராஜா சாரின் கைவண்ணத்தில் மதியம் இரண்டு மணிக்கெல்லாம் காலியாகிருக்கும். 

மன இறுக்கம் கொண்ட எத்தனையோ இரவுகளில் ராஜா சார் மீதம் வைத்த சரக்கை குடித்துவிட்டு எப்போது உறங்கினேன் என்றே தெரியாமல் மட்டையாகி இருக்கிறேன். ராஜா சார் கழுத்தில் எப்போதும் ருத்திராட்ச கொட்டை அணிந்திருப்பார் என்பதால் நான் அவரை செல்லமாக “கொட்டை” என்றே சொல்லுவேன். இந்த விஷயம் அவருக்கு தெரியாது. தெரிந்தால் கொட்டையை எடுத்துவிடுவார். இப்படியாக ராஜாவை பற்றி இன்னும் சொல்லிக்கொண்டே இருக்கலாம்... சொல்லிக்கொண்டே இருப்பேன்...

என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN